தந்தைகளின் உல்லாசம்-2 சிறுவர்கள் தற்கொலை
வேலூர்:தங்களது தந்தைகள் குடும்பத்தை விட்டு விட்டு வேறு பெண்களுடன் குடும்பம் நடத்தி வந்ததால் மனம் உடைந்த 2 சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
வட ஆற்காடு திருப்பத்தூரை அடுத்து உள்ள கிராமம் ஆண்டியப்பனூர். இக்கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவருக்கு ராணி என்ற மனைவியும், கலைவாணி (14) என்ற மகள், சிவக்குமார் (13), அசோக்குமார் (17) ஆகிய மகன்களும் உள்ளனர்.
இதே பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி லதா. இவர்களுக்கு வேலு என்ற 13 வயது மகனும், கோமதி என்ற 14 வயது மகளும் உள்ளனர்.
லதாவை விட்டுப் பிரிந்த சாந்தகுமார் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இதேபோல சேகரும் தனது குடும்பத்தை விட்டு வெளியேறி பெங்களூரில் இன்னொரு பெண்ணுடன் வசித்து வருகிறார்.
அசோக்குமாரும், வேலுவும் ஒரே பள்ளியில் படிப்பதால் நண்பர்கள் ஆகினர். இருவரும் தங்களது தந்தையின் போக்கு குறித்து வருத்தப்பட்டுக் கொள்வார்களாம்.
இருவரின் வாழ்க்கையும் ஒரே மாதியாக இருக்கிறதே என்று வேதனைப்பட்ட அவர்கள், தங்களது குடும்பத்தினரின் சோகத்தை எண்ணி விரக்தி அடைந்தனர்.இதைத் தொடர்ந்து இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இதையடுத்து இருவரும் விஷம் அருந்தினர். இதை அறிந்த ஊர் மக்கள் இரு சிறுவர்களையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் இருவரும் வழியிலேயே பரிதாபமாக இறந்தனர்.