மதிமுக ஜீவநதி;விலகுவோர் நீர்குமிழிகள்-வைகோ
சென்னை:மதிமுகவில் இருந்து விலகி போகிறவர்கள் மீது எனக்கு எந்த வித கோபமும் இல்லை. அவர்கள் எங்கிருந்தாலும்வாழ்க என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சென்னையில் மதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில்,
மதிமுகவில் இருந்து விலகியவர்கள் மீது எனக்கு வருந்தமோ, கோபமோ இல்லை. இது கற்கள் முட்கள் நிறைந்தபயணம். இந்த பயணத்தை தொடர முடியாமல் விலகிச் செல்ல முயல்கிற போது இதுவரை வந்ததற்காக பாராட்டி,இனி போகிற இடத்தில் நன்றாக இருக்கட்டும் என்று நினைப்பவன். என்னை தூற்றினால் அவர்களுக்கு அங்குவாழ்வு கிடைக்கும் என்றால் தூற்றிவிட்டு போகட்டும்.
ஒரு ஜீவ நதி ஓடும் போது அதில் பல நீர்குமிழிகள் தோன்றி மறையும், நீர் குமிழி மறைந்துவிட்டால் ஜீவ நதியேஅழிந்துவிடும் என்று கருதினால் அது முட்டாள் தனம். அதிகமாக என்னை வசை பாடும் போது வலிமையாகிவிட்டோம் என்று சந்தோஷப்படுகிறேன். நம்மைப் பார்த்தால், (திமுகவுக்கு) அவ்வளவு எரிச்சல், பயம்.
இங்கு அண்ணா நகர் பகுதி செயலாளராக இருந்தவரை பொய் வழக்கு போட்டு மிரட்டியதால், தன்னைக்காப்பாற்றிக் கொள்ள அவர்களது (திமுகவில்) கட்சியில் இணைந்துள்ளார். அதே போல அதிமுக வார்டுக்குபோட்டியிட்ட மேரி டேனியலை மிரட்டி கட்சியில் சேர்த்தார்கள். அவர் இதன் காரணமாகவே இறந்து போனார்.இதன் மூலம் அதிமுகவையும், மதிமுகவையும் அசைத்துவிட முடியாது.
மதிமுக என்ற இந்த இயக்கம் லட்சக்கணக்கான தொண்டர்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்டது. இயக்கத்தில்இருந்து சிலர் சென்றாலும் சீதக்காதி போல நன்மை செய்துவிட்டுத்தான் செல்கின்றனர். சிலர் விலகிச் செல்வதால்மேலும் கட்சி வளருமே தவிர அழிந்து விடாது.
எங்கள் இயக்கத்தில் எவ்வளவு கஷ்டம், சோதனை வந்தாலும் தாங்கிக் கொள்ளும் தொண்டர்கள் இருக்கிறார்கள்.மலைகளை பந்தாடும் வல்லமை எங்களுக்கு உண்டு என்றார்.