ஆஸி. காட்டுத் தீ: 1000 கங்காருக்கள் பலி
சிட்னி:ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் சிக்கி ஆயிரக்கணக்கான கங்காருக்கள் மற்றும் கோலா கரடிகள் பலியாகி விட்டன.
தென் கிழக்கு ஆஸ்திரேலியாவுக்குட்பட்ட 3 மாநிலங்களில் உள்ள வனப் பகுதியில் கடந்த 2 வாரங்களாக காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் தீயாக இருப்பதால் இதைகட்டுப்படுத்த முடியாமல் வனத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
இந்த தீவிபத்தில் சிக்கி ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கான கங்காருக்குள் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளன.கோலா வகை கரடிகளும் இறந்துள்ளன. இதுகுறித்து ஆஸ்திரேலிய வன விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின்தலைவர் பேட் ஓ பிரையன் கூறுகையில், கடும் வெப்பம் மற்றும் தீயில் சிக்கி விலங்குகள் அதிக அளவில்பலியாகி வருகின்றன.
தீயில் சிக்கி இறந்ததை விட தீயின் வெப்பத்தில் கருகியவைதான் அதிகம் உள்ளன. கோலா வகை கரடிகளால்மரத்தில் ஏறித் தப்பி விட முடியும். ஆனால் தகிக்கும் வெப்பத்திலிருந்து அவற்றால் தப்ப முடியவில்லை.
ஆயிரக்கணக்கான பறவைகளும் கூட தீக்கிரையாகியுள்ளன. வேறு எங்கும் காண முடியாத சில அரிய வகைதவளைகள், பறவைகள் அதிக அளவில் இறந்துள்ளன என்றார் பிரையன்.
விக்டோரியா, டாஸ்மானியா நியூ செளத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள 8 லட்சத்து 47 ஆயிரம் ஹெக்டேர்பரப்பளவிலான காட்டுப் பகுதியில் தற்போது தீ தீவிரமடைந்துள்ளது.
விக்டோரியாவில் 4000 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிக் கொண்டுள்ளனர். இந்த தீவிபத்தில் 30வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இப்பகுதியில் அதிக அளவில் உள்ள யூகலிப்டஸ் மரங்களால்தான் தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்குபெரிதாகியுள்ளது. யூகலிப்டஸ் மரங்களில் உள்ள எண்ணெய் தீயை கொளுந்து விட்டு எரிய செய்து விட்டது.
தற்போது ஆஸ்திரேலியாவில் கோடைக்காலம். கடும் வறட்சி காரணமாக காட்டில் ஈரப்பதம் இல்லாமல் போய்விட்டது. இதனால்தான் தீ அதிக அளவு உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் கோடைகாலத்தில் ஏற்படும் காட்டுத்தீயில் சிக்கி 250 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.