ரெய்டு போராட்டம்: விஜயகாந்த்துக்கு ஜெ. கொட்டு!
சென்னை:வருமான வரி சோதனை நடத்தினால் ஊரைக் கூட்டி ஓலமிட்டு கொடும்பாவிகளை எரிப்பதும், வாகனங்களை கொளுத்துவதும் தரம் தாழ்ந்த, சிறுபிள்ளைத்தனமான செயல் என தேமுதிகவுக்கும், அதன் தலைவர் விஜயகாந்த்துக்கும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனம்தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் விஜயகாந்த்தை சரமாரியாக விமர்சித்து ஜெயலலிதா அறிக்கை விடுத்தார். மது போதையில் மயங்கிக்கிடக்கிறார் என படு காரமாக விமர்சித்திருந்தார். இதற்கு விஜயகாந்த், நீங்கள்தான் அருகில் இருந்து ஊற்றிக் கொடுத்தீர்களா என்று பதிலுக்கு படுவேகமாக அறிக்கை விட்டார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்துள்ளார் ஜெயலலிதா. சமீபத்தில் விஜயகாந்த் மற்றும் அவரைச்சார்ந்தவர்களின் இருப்பிடங்களில் நடந்த வருமான வரிச் சோதனை மற்றும் அதைத் தொடர்ந்து தேமுதிகவினர் நடத்திய போராட்டங்களை அவர்கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இன்று ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
சமீபத்தில் சிலரது வீடுகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் ஊரைக் கூட்டி, ஓலமிட்டு, கொடும்பாவிகளைஎரித்தும், அரசு வாகனங்களைக் கொளுத்தியும் தரம் தாழ்ந்து செயல்பட்டுள்ளனர்.
வெற்றியாளர் ஆவதற்கு இடையறா முயற்சியும், சோர்வடையாத போராட்டமும், நீண்ட கால அனுபவமும் அவசியம். ஆனால் திடீர்அரசியல்வாதிகளுக்கு இது தெரிந்திருக்க நியாயமில்லை.
சின்ன விஷயத்தை பெரிதாக்கி, மக்கள் அனுதாபத்தை பெற முயற்சிப்பது சரியான பாதையல்ல. அரசியலில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும்.எனக்கும், என்னைச் சேர்ந்தவர்களுக்கும், கட்சியின் முன்னணி நிர்வாகிகளுக்கும் இதுபோல எத்தனையோ சோதனைகள் நடந்துள்ளது.அதையெல்லாம் தாங்கி எங்களுக்குப் பழகிப் போய் விட்டது.
பல ஆண்டு காலமாக எண்ணற்ற சோதனைகள் எனக்கு ஏற்பட்ட போதிலும், அவற்றைப் பற்றி நான் கட்சிக்காரர்களிடம் கூட சொன்னதில்லை.சட்டரீதியாகவும், துணிவோடும் சமாளித்து வருகிறேன்.
துன்பங்களைத் தாங்கிக் கொண்டு மகிழ்ச்சியை தொண்டர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். என் மீது தொடரப்பட்ட 12 வழக்குகளில் நிரபராதி எனவிடுவிக்கப்பட்டுள்ளேன்.
அரசியல் ரீதியாக பழிவாங்க வருமான வரித்துறையைப் பயன்படுத்துவது புதிய விஷயமல்ல. யார் மத்திய அரசில் இருந்தாலும் இது தவறாமல்நடந்து வருகிறது. பாஜக ஆட்சியில் அதிமுக இடம் பெற்றிருந்தபோது, காவிரிப் பிரச்சினையில் பாஜகவின் கட்டளையை நான் ஏற்க மறுத்ததால், 6நிதியாண்டுக்குரிய வருமான வரிக் கணக்கை நான் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி அதுதொடர்பான வழக்குகளை மீண்டும் திறந்து தொல்லைகொடுத்தனர்.
1996ல் மத்தியில் மீண்டும் கூட்டணி ஆட்சி வந்து, ப.சிதம்பரம் நிதியமைச்சர் ஆனபோது எனது வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்து தொல்லைகொடுத்தனர்.
2004ல் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி வந்தபோது, என் மீதான வருமான வரிக் கணக்குகளை மீண்டும் திறந்து வழக்குகளைதொடர்ந்துள்ளனர்.
1967ல் நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய ஹைதராபாத் தோட்டத்தை அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக கூறி ஆந்திர முதல்வரின்தூண்டுதலின் பேரில் 15 நாட்களில் காலி செய்ய வேண்டும் என இப்போது நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
ஆந்திர முதல்வருக்கு எதிராக தெலுங்கு தேசம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற ஒரே காரணத்திற்காக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
துன்பங்களை, பிரச்சினைகளை, நானே எதிர்கொண்டு சமாளிக்கப் பழகி விட்டேன். சிலரைப் போல வன்முறை, கொடும்பாவி எரிப்பு எனசிறுபிள்ளைத்தனமாக செயல்படவில்லை.
பிரச்சினைகளை சட்டரீதியாக எதிர்கொள்ளாமல் கொடும்பாவிகளை எரிப்பது, வன்முறை நிகழ்த்துவது என்பது தவறான முன்னுதாரணமாகும்.இப்போதாவது யார் வானம், யார் கைக்குட்டை என்பது மக்களுக்குத் தெரிந்திருக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications