மந்த மறுதேர்தல் முடிந்தது: 35% ஓட்டுப்பதிவு
சென்னை: சென்னை மாநகராட்சியின் 67 வார்டுகளுக்கு நடந்த மறு தேர்தல் பெரிய அளவிலான வன்முறை ஏதுமின்றி,மந்த கதியில் நடந்து முடிந்தது.
மறு தேர்தல் அறிவிக்கப்பட்ட 100 வார்டுகளில் 33 வார்டுகளுக்கு போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வுசெய்யப்பட்டு விட்டனர். மீதமுள்ள 67 வார்டுகளுக்கு மட்டும் இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவுநடந்தது.
வாக்குச் சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 416 வேட்பாளர்கள்களத்தில் உள்ளனர். தேமுதிக சார்பில் 62, திமுக 36, பாஜக 34, காங்கிரஸ் 19, பாமக 10, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் 8, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் 2 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்கள் தவிர 245சுயேச்சைகளும் போட்டியிடுகின்றனர்.
15 லட்சத்து 94 ஆயிரத்து 653 வாக்காளர்கள் வாக்களிக்க, 1534 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.பாதுகாப்புப் பணியில் 12 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர். வாக்குப்பதிவு வீடியோவில் பதிவுசெய்யப்பட்டது.
பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையில் மழை பெய்ததால்வாக்குப் பதிவு படு மந்தமாக ஆரம்பித்தது. இருப்பினும் மழை விட்ட பிறகும் கூட வாக்குப்பதிவில்விறுவிறுப்பு ஏற்படவில்லை.
பெண்கள் கூட்டத்தையே எந்த வாக்குச் சாவடியிலும் காண முடியவில்லை. மிக மிக சொற்பமானஅளவிலேயே பெண்கள் வாக்களிக்க வந்திருந்தனர்.
வாக்குச் சாவடிகளுக்கு முன்பு சொற்ப வாக்காளர்களே காணப்பட்டனர். வாக்குச் சாவடிகளில் திமுக, தேமுதிக,பாஜக உள்ளிட்ட கட்சிகளின் ஏஜென்டுகள் மட்டுமே இருந்தனர்.
முக்கியக் கட்சிகளான அதிமுக, மதிமுக ஆகியவை புறக்கணித்து விட்டதால் படு அமைதியாக வாக்குப்பதிவுநடந்தது. பல வாக்குச் சாவடிகளில் தேர்தல் அலுவலர்கள், பூத் ஏஜென்டுகள் மட்டுமே காணப்பட்டனர்.
தேர்தல் நடப்பது போன்றே தெரியாத அளவுக்கு படு அமைதியாக வாக்கப்பதிவு நடந்தது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் காலை 10 மணி நிலவரப்படி 10 ஓட்டுக்களும், 20 ஓட்டுக்களும்தான் பதிவாகியிருந்தன.
மிக மிக மந்தமாக நடந்து வந்த வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த மந்த மறுதேர்தலில் 30 முதல் 35 சதவீதம் வரையிலான வாக்குகள் பதிவாயிருப்பதாக தேர்தல் ஆணையம்தெரிவித்துள்ளது.
இன்றைய மறு வாக்குப் பதிவின்போதும் பல இடங்களில் அடிதடி, கள்ள ஓட்டு உள்ளிட்ட அமர்க்களங்கள்நடந்தேறின.
கத்தியுடன் கார்களில் வந்த கும்பல்:
அடையாறு காந்தி நகர் தாமோதரன் புரம் வாக்குச் சாவடிக்கு ஒரு கும்பல் 3 வேன் மற்றும் 2 கார்களில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்தது. வாக்குச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டுப்போட அக்கும்பல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாஜக வேட்பாளர், பூத் ஏஜென்டு ஆகியோர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். கடந்த தேர்தலைப் போல இல்லாமல் இந்த முறை போலீஸ் படை உடனடியாக அங்கு விரைந்தது.அதற்குள் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி விட்டது.
ராயபுரம் பகுதியில் 19வது வார்டுக்கு நடந்த வாக்குப் பதிவின்போது பாமக வேட்பாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவாகபாமகவினர் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக கூறி தேமுதிக வேட்பாளர் தலைமையில் அக்கட்சியினர் போராட்டம்நடத்தினர். அவர்களை பாமகவினரும், போலீஸாரும் அடித்து விரட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.கடைகள் அடைக்கப்பட்டன.
இதேபோல திருவல்லிக்கேணியில் திமுகவினர் கள்ள ஓட்டுப் போடுவதாக கூறி பாஜகவினர் போராட்டத்தில் குதித்தனர்.அவர்களை போலீஸார் அங்கிருந்து கலைந்து போகுமாறு எச்சரித்தனர்.
இதனால் போலீஸாருக்கும், பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.இதைத் தொடர்ந்து பாஜக தொண்டர் சரவணன் என்பவரை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.இதையடுத்து ஆத்திரமடைந்த பாஜகவினர் திருவல்லிக்கேணி காவல் நிலையம் சென்று போராட்டத்தில் குதித்ததால்பரபரப்பு ஏற்பட்டது.
தேர்தல் ஆணையரிடம் பாஜக புகார்:இதற்கிடையே, மாநகராட்சி மறு தேர்தலில் பெருமளவில் முறைகேடுகளும், வன்முறைகளும் நடப்பதாக மாநிலத் தேர்தல்ஆணையர் சந்திரசேகரனுக்கு பாஜக பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன் புகார் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள புகாரில், சில வாக்குச் சாவடிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடப்பதாக எங்களதுவேட்பாளர்களிடமிருந்து தகவல்கள் வந்துள்ளன. ஏஜென்டுகளை வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர்.
ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக கள்ள ஓட்டுக்கள் போடுகிறார்கள். வாக்குச் சாவடிக்குள் தாராளமாகசெல்கின்றனர்.
124வது வார்டில், வாக்காளர்களை ஆளுங்கட்சியினர் மிரட்டியுள்ளனர். வெல்டிங் மணி என்பவரது தலைமையில் வந்தகும்பல் வாக்காளர்களை மிரட்டியுள்ளது. இதேபோல 78வது வார்டில் குட்டி என்பவர் தலைமையில் ஒரு கும்பல்மிரட்டியுள்ளது.
எங்களது கட்சியின் மண்டலத் தலைவரை மிரட்டியதுடன் அவரை போலீஸார் காரணமே இல்லாமல் பிடித்துச் சென்றுள்ளனர்.
102வது வார்டிலும் சரமாரியாக கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டுள்ளன. வாக்காளர் அடையாள அட்டைகள் இல்லாமல்பலர் ஓட்டு போட அனுமதிக்கப்பட்டுள்ளனர். 23வது வார்டிலும் இதுபோன்ற முறைகேடுகள் நடந்துள்ளன.
இந்தப் புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார். இதே புகாரைகாவல்துறை ஆணையருக்கும் தமிழிசை அனுப்பியுள்ளார்.
வன்முறை-கள்ள ஓட்டு இல்லை: லத்திகா சரண்
இதற்கிடையே, சென்னை நகரில் மறு தேர்தல் வாக்குப் பதிவு மிகவும் அமைதியாக, சுமூகமாக, வன்முறைச் சம்பவங்கள்இன்றி நடந்து வருவதாக மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறியுள்ளார்.
பட்டாளத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியைப் பார்வையிட்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தேர்தல் அமைதியாக, ஒரு பிரச்சினையும் இன்றி நடந்து வருகிறது. சில இடங்களில் சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டன.அவற்றை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து விட்டனர்.
வன்முறைச் சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை. சிறு சிறு தகராறில் ஈடுபட்டவர்களை போலீஸார் பிடித்து விசாரித்துள்ளனர்என்றார்.
பல இடங்களில் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு,அப்படியெல்லாம் இல்லை என்றார் லத்திகா சரண்.
அதிமுக தொண்டருக்கு சரமாரி அடி:
திருவல்லிக்கேணி 83வது வார்டுக்குட்பட்ட பார்டர் தோட்டம் பகுதியில் அதிமுக தொண்டர் ஜோதி என்பவர்மார்க்கெட்டுக்குப் போய்க் கொண்டிருந்தபோது ஒரு கும்பல் அங்கு வந்து ஜோதியை சூழ்ந்து கொண்டு உருட்டுக்கட்டைகளால் சரமாரியாக தாக்கியது.
இதில் ஜோதியின் மண்டை உடைந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடித்தார். அவரை அங்கிருந்தவர்கள்ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications