இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்:ராமேஸ்வரம் மீனவர் படுகாயம்!
ராமேஸ்வரம்:நாகை மாவட்ட மீனவரைச் சுட்டுக் கொன்ற பரபரப்பு நீங்குவதற்குள் இன்று அதிகாலை மீண்டும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடுநடத்தியது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்களை சுற்றி வளைத்து இலங்கை கடற்படை வீரர்கள்துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், கலியபெருமாள் என்ற மீனவர் குண்டு பாய்ந்து இறந்தார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் சோகம் மறைவதற்குள் இன்று அதிகாலை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மீண்டும் தாக்குதல்நடத்தியுள்ளது.
ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 450 மீனவர்கள் இன்று அதிகாலை மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள்இந்தியப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்கள் சரமாரியாக சுட ஆரம்பித்தனர். இதில் தங்கச்சி மடத்தைச்சேர்ந்த சேவியர் என்ற மீனவர் படுகாயமடைந்தார்.
உடனடியாக அவரை கரைக்குக் கொண்டு வந்த மீனவர்கள், சேவியரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கடந்த சில நாட்களாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து சரமாரியாக தாக்குதல் நடத்தி வருவதால் தமிழக மீனவர்கள் பெரும் அதிர்ச்சிஅடைந்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த 23ம் தேதி ராமநாதபுரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்று காணமல் போன 7 மீனவர்கள் இன்று காலை பத்திரமாக கரை திரும்பினர்.