மாணவர்கள் அடிதடி; பெரியாருக்கு இன்சல்ட்
திருச்சி:திருச்சியில் உள்ள ஈ.வெ.ரா அரசு கல்லூரி வளாகத்தில் குடிபோதையில் மாணவர்களுக்கிடையே பெரும் ரகளை ஏற்பட்டது. இந்த ரகளையில்,கல்லூரி வளாகத்தில் உள்ள பெரியாரின் சிலையை சில மாணவர்கள் அவமரியாதை செய்யும் விதமாக நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி வளாகத்திற்குள் நான்கு பேர் நேற்று இரவு குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டனர். கல்லூரி விடுதிப் பக்கம் போய்அவர்கள் கத்திக் கூச்சல் போட்டும், ஆபாசமாக பேசியும் ரகளையில் ஈடுபட்டனர்.
இதைக் கேட்டதும் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் எழுந்து வந்து பார்த்தனர். போதையில் கலாட்டா செய்தவர்கள் யார் என்றுவிசாரித்தபோது, கால்பந்துப் போட்டிக்காக வந்திருந்த மாணவர்கள் என்பதும், அதே விடுதியில் ஒரு பகுதியில் அவர்கள் தங்கவைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து குடிபோதையில் இருந்த மாணவர்களை, கல்லூரி விடுதி மாணவர்கள் கண்டித்து அமைதியாக இருக்குமாறு கூறினர். ஆனால் அதைக்கேட்காத மப்பு மாணவர்கள், பெரியார் கல்லூரி மாணவர்களுடன் மோதலில் குதித்தனர்.
மேலும், கல்லூரி வளாகத்தில் உள்ள பெரியார் சிலையை குடிபோதையில் இருந்த மாணவர்கள் அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதால்,விடுதி மாணவர்கள் ஆவேசமடைந்து அவர்களுடன் மோதலில் குதித்தனர். இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து கல்லூரி முதல்வர் முத்தழகு, காவல்துறையினர் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இந்தசம்பவத்தால் நள்ளிரவில் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.












Click it and Unblock the Notifications