மீனவர்கள் இலங்கையில் மீன் பிடிக்க லைசன்ஸ்?
சென்னை:இலங்கை கடற் பகுதியில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமம் (லைசன்ஸ்) வழங்க இலங்கை அரசு தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி வருவது தொடர் கதையாகி விட்டது. பல காலமாக நடந்து வரும் இந்தத்தாக்குதலுக்கு இதுவரை ஒரு முடிவும் எட்டப்படவில்லை. சமீபத்தில் கூட கலியபெருமாள் என்ற நாகை மாவட்ட மீனவர் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக சமீபத்தில் அறிக்கை விட்ட முதல்வர் கருணாநிதி, இனியும் தாக்குதல் தொடர்ந்தால் மீனவர்களின் கைகள் சும்மா இருக்காது எனகாட்டமாக எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து இலங்கை அரசு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு புதிய தீர்வைக் கூறியுள்ளதாக தெரிகிறது. அதன்படி, இலங்கை கடல்பகுதியை ஒட்டி மீன் பிடிக்க வரும் தமிழக மீனவர்களுக்கு லைசன்ஸ் வழங்க அது தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
தடை செய்யப்பட்ட கடல் பகுதிக்குள் வரக் கூடாது என்பது உள்ளிட்ட சில நிபந்தனைகளை விதித்து இந்த லைசன்ஸ் வழங்கப்படும் எனத் தெரிகிறது.
தமிழக அரசு மற்றும் மத்திய அரசுடன் இதுகுறித்து ஆலோசித்த பின்னர் லைசன்ஸ் வழங்குவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனக்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications