முல்லைப் பெரியாறு அணைக்கு பூகம்ப அபாயம்இல்லை-கேரளாவுக்கு கபில் சிபல் விளக்கம்
டெல்லி:முல்லைப் பெரியாறு உள்பட கேரளாவில் உள்ள எந்த அணைக்கும் பூகம்ப அபாயம் முற்றிலும் இல்லை என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை பலவீனமடைந்து விட்டது, அங்கு பூகம்ப அபாயம் உள்ளது. அப்படி ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும், ஐந்து கேரள மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கிப் போய் விடும், எனவே அணையின் உயரத்தை அதிகரிக்கக் கூடாது, புதுஅணைதான் கட்ட வேண்டும் என கேரளா வீம்பாக கூறி வருகிறது.
இந்தப் புகார்கள் அனைத்தையும் தமிழகமும், நீர்வளத்துறை, பூகம்பவியல் துறை நிபுணர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளபோதிலும் அதை ஏற்கமறுக்கிறது கேரளா.
இந்த நிலையில் கேரளாவில் பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகவே உள்ளதாகவும், அங்குள்ள எந்த அணைக்கும் பூகம்பஅபாயம் இல்லை என்றும் மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் கபில் சிபல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மக்களவை கேள்வி நேரத்தின்போது கேரளாவைச் சேர்ந்த சிபிஎம் உறுப்பினர் கிருஷ்ணதாஸ் எழுந்து, திருச்சூர்-பாலக்காடு எல்லையில் அடிக்கடிநிலநடுக்கம் ஏற்படுகிறது. எனவே முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கேரளாவுக்கு நிபுணர் குழுவை அனுப்பிவிரிவான ஆய்வுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.
இதேபோல பாஜக உறுப்பினர் அனந்தகுமாரும் எழுந்து, கர்நாடகத்தில் உள்ள கொய்னா அணைக்கும் பூகம்ப ஆபத்துக்கள் இருப்பதாக அச்சம்தெரிவிக்கப்படுகிறது. அதுகுறித்தும் ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கபில் சிபல், உறுப்பினர்கள் குறிப்பிடும் அணைகளை கட்டும்போது, நிலநடுக்க ஆபத்துக்கள் குறித்தும் நிபுணர்கள்கருத்தில் கொண்டுதான் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கேரளாவில் உள்ள அணைகளின் பாதுகாப்பு குறித்து உறுப்பினர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, அவை அவசியமற்றவை.
நமது நாட்டை பூகம்பவியல் ரீதியாக நான்கு மண்டலங்களாக பிரித்துள்ளனர். 2, 3, 4, 5 என அந்த மண்டலங்கள் அழைக்கப்படுகின்றன.
இதில் கேரள மாநிலம் 2 மற்றும் 3வது மண்டலங்களுக்கு இடையே வருகிறது. இந்த மண்டலங்களில் உள்ள பகுதிகளில் பூகம்பம் ஏற்படுவதற்கு மிகமிக குறைந்த சாத்தியக்கூறுகளே உள்ளன.
வட இந்தியா, ஜம்மு காஷ்மீர், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், கட்ச் (குஜராத்), வட பீகாரின் சில பகுதிகள், அந்தமான், நிக்கோபார் தீவுகள்ஆகியவை 5வது மண்டலத்தின் கீழ் வருகின்றன. இவை பூகம்பம் ஏற்படுவதற்கு மிக மிக அதிக வாய்ப்புகள் உள்ள பகுதிகள் ஆகும்.
ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள், பீகார், மேற்கு வங்கம், குஜராத்தின் சில பகுதிகள், மகாராஷ்டிராவின் சில பகுதிகள், ராஜஸ்தான் ஆகியவை 4வதுமண்டலத்தின் கீழ் வருகின்றன.
கேரளா, கோவா, லட்சத்தீவுகள், உ.பி. மாநிலத்தின் சில பகுதிகள், குஜராத், மேற்கு வங்கம், பஞ்சாபின் சில பகுதிகள், ராஜஸ்தான், மத்திய பிரததேசம்,பீகார், ஜார்க்கண்ட், தமிழகம், கர்நாடகம், ஒரிஸ்ஸா, ஆந்திரா, சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்கள் 3வது மண்டலத்தின் கீழ் உள்ளன. இங்கு நிலநடுக்கம்ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாகும்.
நாட்டின் பிற பகுதிகள் 2வது மண்டலத்தின் கீழ் வருகின்றன என்று விளக்கினார் கபில் சிபல். அமைச்சரின் இந்த பதிலுக்கு கேரள எம்.பிக்கள் சிலர்அதிருப்தி தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட தமிழக எம்.பிக்கள் சிலர், முல்லைப் பெரியாறு பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்ப முயலும்கேரளாவின் செயலைக் கண்டித்துக் குரல் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications