மே.வங்கத்தில் பயங்கரம்-போலீஸ் துப்பாக்கிச்சூடு: 13 விவசாயிகள் பலி-பெரும் பதட்டம்
கொல்கத்தா:மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமம் கிராமத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தில்பெரும் வன்முறை வெடித்தது. போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதனால் மேற்கு வங்கத்தில் பெரும்பதட்டம் நிலவுகிறது.
மேற்கு வங்க மாநிலம் மிதினாபூர் மாவட்டத்தில் உள்ள நந்திகிராமம் கிராமத்தில், இந்தோனேசிய நிறுவனம் ஒன்று சிறப்பு பொருளாதாரமண்டலத்தை அமைக்கவுள்ளது. இதற்காக விவசாயிகளின் நிலங்களை அரசு கையகப்படுத்தி அந்த நிறுவனத்திற்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்கு நந்திகிராமம் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று காலை இப்பகுதியில் 5,000க்கும்மேற்பட்டோர் திரண்டு காவல்துறையின் அடக்குமுறையைக் கண்டித்து போராட்டத்தில் குதித்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள்.
போலீஸார் அனைவரையும் கலைந்து செல்லுமாறு உத்தரவிட்டனர். ஆனால் விவசாயிகளும், கிராம மக்களும் அதைக் கேட்கவில்லை. மாறாககாவல்துறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.
போலீஸார் மீது கிராம மக்களும், விவசாயிகளும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். சிலர் நாட்டு வெடிகுண்டுகளையும் வீசினர். நிலைமைமோசமாவதை உணர்ந்த போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினர்.
குருவியைச் சுடுவது போல சரமாரியாக போலீஸார் துப்பாக்கிகளால் சுட்டுத் தள்ளினர். இதில், ஒரு பெண் உள்பட 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.ஒரு விவசாயி, போலீஸார் மீது நாட்டு வெடிகுண்டை வீச முயன்றபோது அது வெடித்து அந்த விவசாயி பலியானார்.
அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காணப்படுகிறது. பெருமளவில் அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். உடல்கள் சிதறிக் கிடக்கின்றன.அவற்றை போலீஸார் அப்புறப்படுத்த விட மாட்டோம் என விவசாயிகளும், கிராம மக்களும் கூறியுள்ளதால் வயல்களில் உடல்கள் நீண்ட நேரம்கிடந்தன.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் மேற்கு வங்கம் முழவதும் பதட்டம் நிலவுகிறது. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின்தொண்டர்கள் போராட்டத்தில் குதித்தனர். சாலை மறியலில் ஈடுபட்டு பல பேருந்துகளை அடித்து நொறுக்கினர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த சம்பவத்தைக்கண்டித்து நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு மம்தா பானர்ஜி தனதுகட்சியினருடன் செல்ல முயன்றார். ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த சாலைப் பகுதியில் தடைகளை ஏற்படுத்தி சாலையைத்துண்டித்தனர். இதனால் மம்தா தனது திட்டத்தை ரத்து செய்ய நேரிட்டது.