பாப் உல்மர் விஷம் வைத்துக் கொலை?-பாகிஸ்தான் அணி வெளியேற தடை!!
கிங்ஸ்டன்:பாகிஸ்தான் கிரிக்கெட் பயிற்சியாளர் பாப் உல்மர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. அவர் தங்கியிருந்தஅறையில் விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, உல்மர் மர்ம மரணம் குறித்த விசாரணை முடியும் வரை ஜமைக்காவை விட்டுவெளியேற பாகிஸ்தான் அணிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் ஆல் ரவுண்டரான பாப் உல்மர், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தார். பாகிஸ்தான் அணி உலகக்கோப்பைப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுடன் படு மோசமாக ஆடி தோல்வியுற்றது.அயர்லாந்து அணியுடன் பாகிஸ்தான் மோதி தோல்வியுற்ற அன்று இரவு பாப் உல்மர் தனது அறையில் பிணமாகக் கிடந்தார். கிரிக்கெட் உலகில்பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் இது எழுப்பியுள்ளது.
முதலில், பாகிஸ்தான் அணி தோல்வியுற்றதால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக உல்மர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. பின்னர் அதிகமது அருந்தியதால் இறந்திருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் தற்போது உல்மர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம்வலுத்துள்ளது.
உல்மர் பிணமாக கிடந்த அறையிலிருந்து விஷம் இருந்ததற்கான சான்றுகள் சிக்கியுள்ளன. உல்மர் உடலில் செவ்வாய்க்கிழமை நடந்த பிரேதப்பரிசோதனையில் திட்டவட்டமாக எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து மேலும் சில சோதனைகளை செய்து பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சோதனைகளின் முடிவுகள் வரும் வரை காத்திருக்க ஜமைக்கா போலீஸ் முடிவு செய்துள்ளது. பாப் மரணம் தொடர்பான விசாரணையின் முழுவிவரங்களை நாளை ஜமைக்கா காவல்துறை வெளியிடவுள்ளது.
பாக். வீரர்களிடம் விசாரணை: வெளியேற தடை
இதற்கிடையே, உல்மர் இறந்தபோது, பாகிஸ்தான் அணி வீரர்கள் எங்கிருந்தனர் என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
வீரர்கள் தவிர பாகிஸ்தான் அணியின் உடற்பயிற்சியாளர், பயிற்சியாளர் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
உல்மரை சூதாட்டக்காரர்கள்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் மிகவும் வலுவடைந்து வருகிறது. மேற்கு இந்தியத் தீவுகள்அணியுடனும், அயர்லாந்து அணியுடனும், பாகிஸ்தான் வீரர்கள் விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது சூதாட்டம் மிகப் பெரிய அளவில்விளையாடியுள்ளதாக சந்தேகம் எழுகிறது.
பாகிஸ்தான் வீரர்கள் சிலருக்கு சூதாட்டக்காரர்களுடன் தொடர்பு இருந்திருக்க வேண்டும். இதன் காரணமாகவே ஏனோதானோவென்று அவர்கள்விளையாடி தோற்றிருக்க வேண்டும். இது உல்மருக்கு தெரிந்திருக்க வேண்டும். அவர் மூலம் பிரச்சினை வந்து விடக் கூடாதே என்றுசூதாட்டக்காரர்கள் விஷம் வைத்து அவரைக் கொன்றிருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
உல்மர் மரணம் தொடர்பான விசாரணை குறித்து ஜமைக்கா காவல்துறை துணைத் தலைவர் மார்க் ஷீல்ட்ஸ் கூறுகையில், பாப் உல்மரின் மரணம்இயற்கையானது அல்ல. அவர் விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை மறுத்து விட முடியாது.
அவரது மரணம் மர்மமானது என்ற முடிவுக்கு வந்துள்ளோம். அதேசமயம், இந்த மர்மம், சாதாரணமானதாகவும் இருக்கலாம், பயங்கரமானபின்னணியைக் கொண்டதாகவும் இருக்கலாம்.
உல்மரின் பிரேதப் பரிசோதனையில் தெளிவான முடிவு கிடைக்கவில்லை. மேலும் சில சோதனைகளை செய்யவுள்ளோம். அதன் பிறகேதிட்டவட்டமான முடிவுக்கு வர முடியும். தற்போதைக்குக் கிடைத்துள்ள தகவலின்படி இது இயற்கையான மரணம் அல்ல என்பதை உறுதியாகச்சொல்ல முடியும்.
உல்மரின் அறையில் வேறு சிலரின் கைரேகைகள் சிக்கியுள்ளன. பாகிஸ்தான் வீரர்கள் தாங்கள் தங்கியுள்ள ஹோட்டலை விட்டு வெளியேறவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்றார் ஷீல்ட்ஸ்.
உல்மர் விஷம் வைத்துத்தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் சர்பிராஸ் நவாஸ் கூறியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நவாஸ் கூறுகையில், சூதாட்டக்காரர்கள்தான் உல்மரைக் கொன்று விட்டனர். நிச்சயம் சூதாட்டக் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளது.இதுகுறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் நவாஸ்.
இதற்கிடையே, இன்று ஜிம்பாப்வேவுடன் நடைபெறவுள்ள போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடுமா என்பதில் திடீர் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து அணியின் மேலாளர் பர்வேஸ் மிர் கூறுகையில், வீரர்கள் அனைவரும் உடைந்து போயுள்ளனர். போட்டியை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார். கடைசி நேரத்தில் போட்டியிலிருந்து விலகும் முடிவை பாகிஸ்தான் எடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, உல்மர் விவகாரம் தொடர்பான விசாரணை முடியும் வரை ஜமைக்காவிலிருந்து வெளியேற வேண்டாம் என பாகிஸ்தான்அணியினரை காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளதாம்.












Click it and Unblock the Notifications