ஓசூரில் விரைவில் விமான நிலையம்
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விரைவில் விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் பாபு கூறியுள்ளார்.
தமிழக, கர்நாடக எல்லையில் உள்ள தொழில் நகரம் ஓசூர். பெங்களூருக்கு வெகு அருகில் இருக்கும் நகரம் என்பதாலும், பெங்களூரைப் போன்றதட்ப வெப்பம் நிலவும் நகரம் என்பதாலும், ஓசூர் நகரமும் படு வேகமாக வளர்ந்து வருகிறது.
பெங்களூருக்குப் போட்டியாக ஓசூரை தகவல் தொழில்நுட்ப நகராக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. ஓசூரை பலவகைகளிலும் மேம்படுத்த விஷன் 2015 என்ற திட்டத்தை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஓசூர் நகரம் 3ம் நிலை நகரமாக (டயர் 3) அறிவிக்கப்பட்டுள்ளது. 3ம் நிலை நகரம் ஒன்றில் விமான நிலையம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஓசூர் விமான நிலையம் குறித்து ஆட்சித் தலைவர் சந்தோஷ்பாபு கூறுகையில், ஒசூர் தொழில்துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில்விஷன் 2015 திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஓசூரில் விமான நிலையம் அமைக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் துணை நகரம் போல மாறி வருகிறது ஓசூர். பெங்களூர் நகருக்கும், ஓசூருக்கும் இடையிலான பயண நேரம் அரை மணி நேரமாகவேஇருக்கிறது. பெங்களூரில் தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய சர்வதேச விமான நிலையம் தேவனஹள்ளியில் உருவாகிறது.
தேவனஹள்ளி விமான நிலையத்திற்கும், பெங்களூரூ எலக்ட்ரானிக் நகரத்திற்கும் இடையிலான பயண நேரம் 3 மணி நேரமாகும். ஆனால்ஓசூருக்கும், எலக்ட்ரானிக் சிட்டிக்கும் இடையிலான நேரம் அரை மணி நேரமே.
எனவே இதைக் கருத்தில் கொண்டு பெங்களூர் விமான பயணிகளை ஈர்க்கும் வகையில், ஓசூரில் விமான நிலையம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பெங்களூருக்கு வரும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், வெளிநாட்டவர்களை ஓசூர் விமான நிலையம் கவரமுடியும் என்றார் பாபு.
ஏற்கனவே ஒளிரும் ஓசூர் என்ற திட்டத்தையும் மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications