ராமதாஸின் உள்நோக்கம்: அன்பழகன் சாடல்
சென்னை: 60 ஆண்டு காலமாக பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள முதல்வர் கருணாநிதி மீது இழிவான குற்றச்சாட்டைக் கூறியிருப்பதன் மூலம் தான் உள்நோக்கத்துடன் செயல்படுவதை டாக்டர் ராமதாஸ் உறுதிப்படுத்தியுள்ளார் என்று திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான க.அன்பழகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்டு, அகில இந்திய அரசியல் கட்சித் தலைவர்களுடனும், தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடனும், பேசியும், பழகியும், பல கட்டங்களில் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளார்.
அவரது அரசியல் ஆளுமையில் உள்ள பண்பாட்டையும், நாகரீகத்தையும் எவரும் அறிவர். எதிர்க்கட்சியாக செயல்பட்ட காலகட்டங்களில் கூட எந்த ஒரு தலைவரையும், மரியாதைக் குறைவாகவோ, நாகரீகமற்ற முறையில் பேசியதோ, எழுதியதோ கிடையாது.
வார இதழில் வெற்றி கொண்டான் பேட்டி கொடுத்தது குறித்து, பெரிதும் வருத்தப்பட்டதோடு, வெற்றி கொண்டானோடு தொடர்பு கொண்டு உடனடியாக அவர் கொடுத்த பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்கச் சொல்லி, முதல்வர் கருணாநிதிதான் அறிக்கை விட வைத்தார்.
ஆனால் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த ராமதாஸ், வெற்றி கொண்டான் வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டி, அறிவாலயத்தில் தயாரிக்கப்பட்டு, கலைஞரின் பார்வைக்கு கொடுக்கப்பட்டு , வெளியிடப்பட்டதே என்று கூறியுள்ளார்.
ராமதாஸின் இந்த இழிவான கற்பனையை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முதல்வர் கருணாநிதியுடன் இத்தனை ஆண்டுகள் பழகியும், அவருடைய அரசியல் பண்பாட்டையும், அரசியல் நாகரீகத்தையும் தெரிந்து கொள்ளாமல் , கலைஞர் மீது குற்றம்சாட்டியிருப்பது கண்டு நான் வேதனைப்படுகிறேன்.
டாக்டர் ராமதாஸ் இப்படி பேட்டி அளித்திருப்பது, உள்நோக்கத்தோடுதான் அவர் செயல்படுகிறார் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று கூறியுள்ளார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications