சபாநாயகரை முற்றுகையிட்டு அதிமுக போராட்டம்
சென்னை:அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குறித்துக் கூறிய கருத்தால் கோபமடைந்த அதிமுக எம்.எல்.ஏக்கள், சபாநாயகர் ஆவுடையப்பனின் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
சட்டசபையில் இன்று திமுக எம்.எல்.ஏவும், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனுமான ராஜா பேசுகையில், ஜெயலலிதா குறித்து சில கருத்துக்களைக் கூறினார்.
அதைக் கேட்டதும் அதிமுகவினர் கொந்தளித்தனர். செங்கோட்டையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எழுந்து சபாநாயகர் இருக்கை முன்பு முற்றுகையிட்டு ராஜா பேசிய வாசகங்களை அவைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி கோஷமிட்டனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தனது கையில் இருந்த பட்ஜெட் உரையை தூக்கிப் போட்டு ஆவேசமாக பேசினார்.
அதிமுகவினருக்கு எதிராக திமுகவினரும் எழுந்து கோஷமிட்டனர். இதனால் அவையில் பெரும் அமளி நிலவியது. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், ராஜா பேசிய வாசகங்கள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக கூறினார்.
அந்த சமயத்தில் எழுந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அதிமுகவினர் பேசிய வாசகங்கள் அவைக் குறிப்பில் இடம் பெறாது என்றாலும் கூட அவர்கள் பேசிய விதம், அவையின் மரபை மீறும் வார்த்தைகள் ஆகும். எனவே இதை அனுமதிக்கக் கூடாது என்று கோரினார்.
இதையடுத்துப் பேசிய சபாநாயகர், அவையின் மாண்பு, மரபு விதிகளை மீறும் வகையில் பேசக் கூடாது என்று அதிமுகவினரை எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications