ஜெயலலிதாவிற்கு கருப்புக்கொடி: கராத்தே
சென்னை:
அதிமுக தலைமக் கழக அலுவலகத்துக்கு ஜெயலலிதா வரும்போது அவருக்குக் கருப்புக் கொடி காட்டுவோம், அவரது கொடும்பாவியை எரிப்போம் என ஜெயலலிதாவால் அதிமுகவிலிருந்து துரத்தப்பட்டு பின்னர் காங்கிரஸில் இணைந்த முன்னாள் சென்னை மாநகராட்சி துணை மேயர் கராத்தே தியாகராஜன் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவரும், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் மங்கள்ராஜூம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததை குறித்து வெளியிட்ட கருத்துக்கு தான் நடத்தும் முதியோர் இல்லத்தின் மூத்த பிரதிநிதி ஆன சுலோச்சனா சம்பத்தின் பெயரால் ஒரு பதில் அறிக்கை கொடுத்து அற்ப சந்தோஷம் அடைந்திருக்கிறார் ஜெயலலிதா.
காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி சண்டையில் வேஷ்டி கிழிகிறது எனக் கூறியுள்ளார் சுலோச்சனா சம்பத்.
தேனி மாவட்டத்தில் தினகரன் கோஷ்டியினரும், மகாதேவன் கோஷ்டியினரும் சண்டைபோட்டு மண்டையை உடைத்துக்கொள்ளும் மகத்துவம் அதிமுகவின் தனித்துவம்.
மறைந்த தலைவர் ராஜீவ் காந்தி சிந்திய ரத்தத்தால் முதன்முறையாக ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா இன்று அதையெல்லாம் மறந்துவிட்டு காங்கிரஸ் கட்சியை ஏளனம் செய்கிறார். இரட்டை இலை சின்னத்தை கிடைக்க செய்தது காங்கிரஸ் கட்சிதான் என்பதை அவர் மறந்துவிட்டார்.
ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது எல்லோரும் ஓடி விட்டார்கள் எனக் கூறியுள்ளார். அந்த நேரத்தில் மூப்பனார், ஜெயந்தி நடராஜன் ஆகியோருடன் நானும் அவரது உடலை எடுத்து வந்தோம் என்பதை உலகம் அறியும். இப்படி இவர் கூறுவது கட்சியையும், காலஞ் சென்ற தலைவர்களையும் களங்கப்படுத்துவதாகும்.
மத்திய அமைச்சர் இளங்கோவன் மீது தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறார்கள். இதுபோன்ற சம்பவம் தொடருமேயானால் ஜெயலலிதா அவரது கட்சி அலுவலகத்திற்கு வரும்போது கொடும்பாவி எரிப்பு, கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என்றனர்.