உல்மரைக் கொன்றது பாக். ரசிகர்களா?
கிங்ஸ்டன்:பாகிஸ்தான் அணி, அயர்லாந்து அணியிடம் தோற்றதால் ஆத்திரமடைந்த 3 பாகிஸ்தான் ரசிகர்கள்தான் பாப் உல்மரைக் கொன்றிருக்க வேண்டும் என புது தகவல் கிளம்பியுள்ளது.
உல்மர் கொலை வழக்கு தொடர்பாக இதுவரை ஜமைக்கா போலீஸார் தெளிவான தகவலைத் தராமல் உள்ளனர். ஆரம்பத்தில் பாகிஸ்தான் அணி வீரர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்பட்டது.
![]() |
ஆனால் 2 முறை நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் பாகிஸ்தான் வீரர்களுக்கு இதில் தொடர்பு இல்லை என்று ஜமைக்கா போலீஸார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சூதாட்டக்காரர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. குறிப்பாக மும்பையைச் சேர்ந்த சூதாட்டக்காரர் ஒருவர்தான் உல்மரைக் கொன்றதாக புதுத் தகவல் எழுந்தது. உல்மர் இறப்பதற்கு முதல் நாள் இரவு அந்த சூதாட்டக்காரர் உல்மர் அறைக்கு வந்தாராம்.
அவரைப் பார்த்ததும், உல்மர் கோபமடைந்து வெளியேறும்படி சொல்லியுள்ளார். இதையடுத்து அந்த நபர் வெளியேறி விட்டாராம். இந்த சம்பவத்தை உல்மரே தங்களிடம் கூறியதாக பாகிஸ்தான் வீரர்கள், போலீஸ் விசாரணையில் கூறியுள்ளனராம்.
இதனால் அந்த சூதாட்டக்காரர் மீதும் போலீஸ் பார்வை திரும்பியுள்ளது. இதற்கிடையே, 3 பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்தான் இந்தக் கொலைக்குக் காரணம் என தற்போது இன்னொரு பரபரப்பு தகவல் எழுந்துள்ளது.
![]() |
இர்பான் செளத்ரி, ஹூண்டே கான், ஹமீத் மாலிக் என்ற அந்த ரசிகர்கள், தீவிர பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள். பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளுக்குத் தவறாமல் வருபவர்கள்.பாகிஸ்தான் வீரர்கள் பலருக்கும், இவர்களை நன்கு தெரியும்.
அயர்லாந்து போட்டிக்கு முன்பு கூட 3 பேரும், பாகிஸ்தான் வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளனர். அயர்லாந்து போட்டி முடிந்த அடுத்த நாளே இவர்கள் அவசரம் அவசரமாக பாகிஸ்தான் திரும்பி விட்டனர். எனவே அயர்லாந்துப் போட்டியில் பாகிஸ்தான் தோற்றதால் ஆத்திரமடைந்து அவர்கள் உல்மரைக் கொன்றிருக்கலாம் என்று புதுச் சந்தேகம் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், உல்மர் கொலை விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த உருப்படியான விவரமும் கிடைக்கவில்லை. இந்த விசாரணை அவ்வளவு சீக்கிரம் முடியாது. நீண்ட காலம் பிடிக்கும். இதுவரை யார் மீதும் திட்டவட்டமான சந்தேகம் எழவில்லை. குற்றவாளிக்கு மிக அருகில் நாங்கள் இருப்பதாக கூற முடியாது என்று விசாரணை அதிகாரியான ஜைமக்கா துணை காவல் ஆணையர் மார்க் ஷீல்ட்ஸ் கூறியுள்ளார்.
இதற்கிடையே, பாகிஸ்தானுடன் நடந்த போட்டியில் எங்களது திறமையால்தான் ஜெயித்தோம். போட்டியில் சூதாட்டம் இடம்பெறவில்லை என்று அயர்லாந்து கேப்டன் டிரன்ட் ஜான்ஸ்டன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சூதாட்டத் தடுப்பு அதிகாரிகள் பார்வையிட்டு சூதாட்டம் நடைபெற்றதா என்பைத ஆய்வு செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications