காவிரி பந்த்-ஸ்தம்பித்தது ஈரோடு
ஈரோடு:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை திருத்தக் கோரியும், சேலம் ரயில்வே கோட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கேரள அரசைக் கண்டித்தும் ஈரோடு மாவட்டத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடந்தது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில், கேரள மாநிலத்துக்கு, தமிழகத்தின் பவானி ஆற்றிலிருந்து 6 டிஎம்சி நீரும், அமராவதியிலிருந்து 3 டிஎம்சி நீரும் என மொத்தம் 9 டிஎம்சி தண்ணீர் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், பவானி பாசனப் பகுதியில் திறந்து விடப்படும் நீரின் அளவையும் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு ஈரோடு மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காவிரி தீர்ப்பை திருத்த வேண்டும் எனக் கோரியும், சேலம் கோட்டத்திற்கு இடையூறு செய்யும் கேரள அரசுக்குக் கண்டனம் தெரிவித்தும் இன்று முழு அடைப்பு நடத்த அழைப்பு விடுக்கப்படது.
பல்வேறு வர்த்தக சங்கங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்டவை இதற்கு அழைப்பு விடுத்தன. அதன்படி இன்று முழு அடைப்புப் போராட்டம் நடந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது.
பஸ் போக்குவரத்து நடக்கவில்லை. ஆட்டோக்கள், டாச்சிகளும் ஓடவில்லை. வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன.
சில பள்ளிகளில் இன்று தேர்வுகளும் கூட ரத்து செய்யப்பட்டன. போராட்டத்தையொட்டி ஈரோடு மற்றும் மாவட்டம் முழுவதும் முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.