மீண்டும் மே.இ. தீவுகள் தோல்வி:இன்று இங்கிலாந்து-அயர்லாந்து மோதல்
செயின்ட் பீட்டர்ஸ் (ஆண்டிகுவா):
சூப்பர் 8 சுற்றுப் போட்டியில், ஆஸ்திரேலியாவுடன் நடந்த முதல் ஆட்டத்தில் படுதோல்வி அடைந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி நேற்று நியூசிலாந்திடமும் தோல்வியைத் தழுவியது.
சூப்பர் எட்டு சுற்றில் இடம் பெற்றுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணியும், நியூசிலாந்து அணியும் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் மோதின.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை பேட் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி பேட்டிங்கைத் தொடங்கியது.
நியூசிலாந்து பந்து வீச்சில் அணல் பறந்ததால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் ரன் குவிக்க முடியவில்லை. மேலும் விக்கெட்டுளும் அடுத்தடுத்து சரியத் தொடங்கின.
44.4 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப் பிடிக்க முடிந்த அந்த அணியால் 177 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி 39.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 179 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நியுசிலாந்து அணியின் ஸ்டைரிஸும், மெக் மில்லனும் சேர்ந்து 102 ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு வித்திட்டனர்.
ஸ்டைரிஸ் ஆட்டமிழக்காமல் 80 ரன்களைக் குவித்தார். மெக்மில்லன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி படு சொதப்பலாக ஆடியது. தொடர்ந்து இந்த அணிக்கு 2வது தோல்வி கிடைத்துள்ளால் அரை இறுதிக்கான வாய்ப்பு மங்க ஆரம்பித்துள்ளது. இன்னும் 4 போட்டிளில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆட வேண்டியுள்ளது.
அதற்கு நேர் மாறாக நியூசிலாந்து அணி 4 புள்ளிகளுன் வலுவான நிலையில் உள்ளது. அரை இறுதிக்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.
மேற்கு இந்தியத் தரப்பில் நேற்று அதிகபட்சமாக கிறிஸ் கெய்ல் 44 ரன்கள் எடுத்தார். கேப்டன் லாரா 37 ரன்களும், பிரேவோ 18 ரன்களும், லென்டல் 14 ரன்களும் எடுத்தனர். முக்கிய வீரர்களான சந்தர்பால், சர்வான், சாமுவேல்ஸ் ஆகியோர் சரியாக ஆடாததால் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2வது தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்தும், அயர்லாந்தும் சந்திக்கின்றன. இரு அணிகளுமே தடுமாற்றத்துடன்தான் சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறின. இதில் அயர்லாந்து அணி, பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய போட்டியிலும் சிறப்பாக ஆடி இங்கிலாந்தை வெல்வோம் என அயர்லாந்து கேப்டன் ஜான்ஸ்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேசமயம், அயர்லாந்து அணியை குறைத்து மதிப்பிடாமல் சிறப்பாக ஆட முயற்சிப்போம் என இங்கிலாந்து கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications