இட ஒதுக்கீடுக்குத் தடை: தமிழகத்தில் நாளை பந்த்
சென்னை:27 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக இடைக்கால தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் நாளை பந்த் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்துள்ளது.
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக சட்டமும் இயற்றப்பட்டது. இந்த கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் அதிரடியான இடைக்காலத் தீர்ப்பை அளித்தது. அதன்படி இன்று முதல் (நேற்று) இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கூடாது. இதர பிற்படுத்ப்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதன் பின்னரே இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில், அண்ணா அறிவாலயத்தில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூடி ஆேலாசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் சனிக்கிழைம தமிழகத்தில் முழு அடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து முதல்வர் கருணாநிதி பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சமூக நீதிச் சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருப்பதை அறிந்து இந்த அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் பெரிதும் அதிர்ச்சி அடைகிறது.
நாடாளுமன்றஉரிமை புறக்கணிக்கப்பட்டு, சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள இந்த திடீர் பின்னடைவிலிருந்து இந்திய நாட்டு மக்களைக் காப்பாற்றுவதற்கு, உடனடியாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டுவதற்கு மத்தி அரசு ஏற்பாடு செய்வது, அதிலே இந்த பிரச்சினை குறித்து விவாதித்து நல்ல முடிவினை எடுக்குமாறு இந்தக் கூட்டம் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மேலும் சமூக நீதியின் பிறப்பிடமான தமிழத்தில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் ஏகோபித்த எதிர்ப்பைக் காட்டிடும் வகையில், வரும் 31.3.2007 (சனிக்கிழைம) அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் தமிழகம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் கடைப்பிடிப்பதென இந்தக் கூட்டம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தின் ஒன்றுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த வேலைநிறுத்தத்தில் அதிமுக, மதிமுக, தேமுதிக உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் பங்கேற்று ஆதரவு தந்து ஒத்துழைக்க வேண்டும் என்று இந்தக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த முழு அடைப்பின்போது ரயில், விமானப் போக்குவரத்தையும் நிறுத்த வேண்டும் என சம்பந்தப்பட்ட துறையினருக்கும் திமுக கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக தலைவர் ஜி.கே.மணி, தி.க. தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் வரதராஜன், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழ் நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன், தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா, போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திமுக தரப்பில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியிலும் நாளை பந்த்:
27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளதை எதிர்த்து தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் நாளை பந்த் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக புதுச்சேரியில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூடி ஆலோசனை நடத்தினர். அக்கூட்டத்தில், தமிழகத்தைப் போலவே நாளை புதுச்சேரியிலும் பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications