பந்த்: பஸ்சைக் கடத்தி பயணித்த பலே முருகன்
திருநெல்வேலி:பந்த் தினத்தன்று அரசுப் பேருந்தைக் கடத்தி பேருந்து நிறுத்தங்களில் காத்திருந்தவர்களை ஏற்றி காசு பார்த்த லாரி டிரைவரை போலீஸார் கைது செய்தனர்.
நேற்று தமிழகம் முழுவதும் பந்த் நடந்தது. இதனால் பேருந்துகள் முற்றிலும் ஓடவில்லை. இந்த நிலையில், நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த முருகன் என்ற லாரி டிரைவர், மது போதையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு வந்தார்.
ஊர் திரும்ப பேருந்து கிடைக்குமா என்று பார்த்தார். ஆனால் ஒரு பேருந்தும் ஓடவில்லை. இதனால் கோபமைடந்த அவர் போதை தலைக்கேற நானே டிரைவர், எனக்கு பஸ் கிடையாதா என்று ஆவேசமாக கூறிய அவர் அங்கு நிறுத்ப்பட்டிருந்த மதுரை-பாபநாசம் பேருந்தில் ஏறினார்.
பின்னர் அந்தப் பேருந்தை ஸ்டார்ட் செய்து கிளப்பினார். மெதுவாக வெளியே வந்த அவர் பஸ் நிலையத்துக்கு வெளியில் உள்ள சுற்றுச்சாலையில் வந்தார். அப்படியே பிக்கப் ஆகி பேருந்தை வேகமாக ஓட்டத் தொடங்கினார்.
சாலை வெறிச்சோடிக் கிடந்ததால், படு வேகமாக பேருந்தை ஓட்டினார் முருகன். திருமங்கலம், டி.கல்லுப்பட்டி தாண்டி ராஜபாளையம் வரை பேருந்து ஓட்டி வந்து விட்டார் முருகன். பின்னர் ராஜபாளையத்தில் பேருந்தை ஓரம் கட்டினார். அப்போது அவருக்கு போதை ஓரளவு தணிந்திருந்தது.
சாலையோரம் பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த பயணிகளைப் பார்த்து வாங்க, வாங்க என்று அழைத்துள்ளார். அவர்களும் பேருந்து வந்து விட்டது என்று நினைத்து ஆசையுடன் ஏறினர்.
அவர்களில் சிலர் சுதாரித்துக் கொண்டு, இன்றுதான் பந்த் ஆச்சே, அரசு பஸ் எப்படி வரும் என்று முருகனிடம் கேட்டனர். அவர்களை சமாதானப்படுத்தி, இது ஸ்பெஷல் பஸ், சீக்கிரமா ஏறுங்க என்று கூறி ஏற்றியுள்ளார்.
அப்போது ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் கனகசுந்தரம் தலைமையில் போலீஸார் அந்தப் பக்கமாக ரோந்து வந்தனர். லுங்கியில் ஒருவர் அரசுப் பேருந்தில் மக்களை ஏற்றிக் கொண்டிருப்பதைப் பார்த்து என்ன ஏது என்று விசாரித்தனர்.
போலீஸாரைப் பார்த்ததும் தடுமாற்றத்துடன் பேசினார் முருகன். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் அவரிடம் விசேஷமாக விசாரித்தனர். அப்போதுதான் பஸ் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து முருகனை போலீஸார் கைது செய்தனர். ஊருக்குப் போக பேருந்துக்குள் ஏறிய 40 பேரும் கீழே இறக்கப்பட்டனர்.
பின்னர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு ராஜபாளையம் போலீஸார் தகவல் தெரிவித்தனர். பேருந்து காணாமல் போனது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேருந்தின் டிரைவர் மகாலிங்கம் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில், அண்ணா நகர் போலீஸார் ராஜபாளையம் விரைந்து வந்து முருகனை அள்ளிக் கொண்டு மதுரைக்குப் பறந்தனர்.












Click it and Unblock the Notifications