நாட்டைத் தட்டி எழுப்பிய பந்த்: ராமதாஸ்
சென்னை:27 சதவீத இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் நடந்த வெற்றிகரமான பந்த் போராட்டம் நாட்டைத் தட்டி எழுப்பியிருக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
பிற்படுத்ப்பட்டவர்களுக்கு உயர் கல்வியில் 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையால் அதற்குப் பெருந்தடை ஏற்பட்டு விட்டது. இந்த நிலையில் இட ஒதுக்கீடு சட்டத்தை வலியுறுத்தி, அதற்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த பந்த் போராட்டம் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றுள்ளது.
இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நீதிக்கு எப்போதுமே தமிழகம் வழிகாட்டியாக திகழ்ந்து வந்திருக்கிறது. எப்போதெல்லாம் சமூக நீதிக்கு ஆபத்து ஏற்பட்டு வந்ததோ, அப்போதெல்லாம் தமிழகம் முன் நின்று அந்த ஆபத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறது.
பொது வேலைநிறுத்தத்தினால் தமிழகம் முடங்கிப் போனதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த வேலைநிறுத்தம் நாட்டைத் தட்டி எழுப்பியிருக்கிறது. நாடு முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையை அவர்களுககு உணர்த்தியிருக்கிறது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications