மீனவர்களைக் காக்க கடிதம் எழுதினால் போதுமா? விஜயகாந்த்
சென்னை:தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி டெல்லிக்கு கடிதம் எழுதினால் போதுமா, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டாமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை,
தமிழக மீனவர்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் அளித்து, அவர்கள் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். ஆனால் இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு அன்றாடம் மீனவர்கள் குண்டடி பட்டு சாவதே சான்றாகும்.
குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல், குழியும் பறித்த கதையைப் போல இந்திய அரசின் கடற்படைத் தலைவர், விடுதலைப் புலிகள்தான் தமிழக மீனவர்களின் சாவுக்குக் காரணம் என்கிறார். ஆனால் தப்பி வந்த மீனவர்களோ, தங்களைச் சுட்டவர்கள் சிங்கள மொழியில் பேசினர் என்கிறார்கள்.
இதிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் யாரை நம்புவது? எவ்வாறு வாழ்க்கையை நடத்துவது? என்ற பிரச்சினைக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழக அரசோ, டெல்லிக்கு கடிதம் எழுதினால் போதும் என நினைக்கிறது. இப்படி அலட்சியமாக நடந்து கொள்ளும் மத்திய, மாநில அரசுகளின் போக்கை தேமுதிக வன்மையாக கண்டிக்கிறது.
பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்படுத்தி மீன் பிடிக்க வழி செய்ய வேண்டும். அவர்களது வறுமையைப் போக்க மாதம்தோறும் வாழ்வூதியம் வழங்க வேண்டும்.
இதுவரை இறந்த 8 மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேமுதிக சார்பில் தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
அதிமுகவும் நிதியுதவி
இதேபோல, அதிமுகவும் கொல்லப்பட்ட மீனவர்கள் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக மீனவர் அணிச் செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள் 5 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ. 25 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications