சமூக விரோதிககள் தொல்லை- புதுக்கோட்டையில் தனியார் மருத்துவமனைகள் ஸ்டிரைக்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 250க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன.
இதுக் குறித்து இந்திய மருத்துவ கழகத்தின் புதுக்கோட்டை கிளை பிரிவு முதன்மை செயலாளர் சையத் மொஹிதீன் கூறுகையில்,
கடந்த சில மாதங்களாக தனியார் மருத்துவமனைகளுக்கு சில சமூக விரோதிகளின் மூலம் தொல்லைகள் இருந்து வருகிறது. மிகவும் மோசமான நிலையில் உள்ள நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வருகின்றனர்.
சிகிச்சைக்கு பின் அவர்கள் இறந்துவிட்டால் அதற்கேற்ற பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டுகின்றனர். இதுபோல் கடந்த 6 மாதத்தில் 5 சம்பவங்கள் நடந்துள்ளன.
இதை எதிர்த்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்து, இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை மருத்துவமனைகளை மூடி வைத்துள்ளோம்.
நோயாளிகள் இறந்தது குறித்து விளக்கம் வேண்டுமானால் அல்லது உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார்.