யாருடனும் கூட்டணிக்கு நான் ரெடி: விஜயகாந்த்
நாகர்கோவில்:தேர்தல் கூட்டணி தொடர்பாக யார் வேண்டுமானாலும் என்னிடம் பேச வரலாம், நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
நாகர்கோவிலில் நேற்று நடந்த மீனவர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த விஜயகாந்த், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரை மேற்குத் தொகுதிக்கு இடைத் தேர்தல் வருகிறது. இதில் நாங்கள் தனித்துத்தான் போட்டியிடுவோம்.
எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் கூட தனித்தே போட்டியிடுவோம். அதேசமயம், கூட்டணிக்காக யாராவது விரும்பினால் அவர்கள் தாராளமாக வந்து பேசலாம். யார் வேண்டுமானாலும் தேமுதிகவுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக என்னுடன் பேசலாம்.
நான் யாரையும் எதிரியாகப் பார்க்கவில்லை. காங்கிரஸுடன் கூட்டணி வைப்பது குறித்து எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. அங்கு மூப்பனார் போன்ற மென்மையான தலைவர்கள் யாரும் இப்போது இல்லை.
எந்த முடிவாக இருந்தாலும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு நிதானத்துடன் தான் எடுப்பேன் என்றார் விஜயகாந்த்.
பின்னர் சின்னத்துறை கிராமத்துக்குச் சென்ற விஜயகாந்த், அங்கு சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களான லைனஸ், மரியஜான், ஜேசுதாஸ், சதீஷ், ஜஸ்டின் ஆகியோரது வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு தலா ரூ. 25,000 நிதியுதவியையும் வழங்கினார்.












Click it and Unblock the Notifications