இலங்கை அரசு, புலிகளுக்கு இந்தியாவின் அறிவுரை
டெல்லி:இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.
2 நாள் சார்க் மாநாட்டின் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இலங்கை இனப் பிரச்சினைக்கு போர் தீர்வு அல்ல. இரு தரப்பும் உடனடியாக சண்டையைக் கைவிட்டு விட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும். நின்று போயுள்ள பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கப்பட வேண்டும்.
இலங்கையில் அதிகாரப் பகிர்வை மேற்கொள்வது தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு இந்தியா சில யோசனைகளைத் தெரிவித்துள்ளது. அதுகுறித்து விவாதித்து விரைவில் ஒரு தீர்வை இலங்கை அரசு காண வேண்டும்.
இலங்கையில் வசிக்கும் சிங்களர்கள், தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு இனத்தவரின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதமான தீர்வு எட்டப்பட வேண்டும். ராணுவத் தீர்வுக்கு சாத்தியமே இல்லை என்பதை இரு தரப்பும் புரிந்து கொள்ள வேண்டும்.
விடுதலைப் புலிகளால் இந்தியாவுக்கு ஆபத்து என்று கூற முடியாது. இந்தியா தீவிரவாதத்தின் விளைவுகளை அனுபவித்து வரும் நாடு. தீவிரவாதம், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகுக்கும் தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றார் முகர்ஜி.












Click it and Unblock the Notifications