நுழைவுத் தேர்வால் கஷ்டமே மிச்சம்: தமிழக அரசு
சென்னை:நுழைவுத் தேர்வால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாலேயே அதை தமிழக அரசு ரத்து செய்தது என்று தமிழக அரசு கூறியள்ளது.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் படிப்புக்கான நுழைத் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் முடிவை எதிர்த்து அஸ்வின்குமார் என்ற மாணவர் உள்பட ஐந்து பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் உயர் கல்வித்துறைச் செயலாளர் கருப்பையா அரசின் சார்பில் விளக்க மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், மாணவர்களின் எதிர்காலத்தை ஒரே ஒரு தேர்வு மூலம் நிர்ணயிக்கும் முறையாக நுழைவுத் தேர்வு விளங்கி வந்தது. மேலும், இந்தத் தேர்வு முறையால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பல்வேறு துயரங்கள் ஏற்பட்டன.
எனவேதான் நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய அரசு முடிவு செய்தது.
நுழைவுத் தேர்வை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார். எனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல.
நுழைவுத் தேர்வு என்பது அதிக செலவீனம் பிடித்த ஒன்று மற்றும் குழப்பமான தேர்வு முறையும் ஆகும். தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தின் மூலம் பல்வேறு கல்வித் திட்டங்களில் படித்து வரும் மாணவர்களிடையே சமச்சீர் தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, அகில இந்திய தொழில் கல்வி கவுன்சில், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவை பதில் மனு தாக்கல் செய்யுமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப பிறப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணை ஏப்ரல் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.