விற்பனைக்கு வந்த இலவச கலர் டிவி
திருநெல்வேலி:தமிழக அரசு வழங்கிய இலவச கலர் டிவி பெட்டிகள் நெல்லையில் வெளிச் சந்தையில் விற்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சமே இலவச கலர் டிவிதான். ஆட்சிக்கு வந்ததும் திமுக அரசு இலவச கலர் டிவி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி விறுவிறுப்பாக வழங்கி வருகிறது.
இந்த நிலையில் நெல்லையில், அரசின் இலவச கலர் டிவி பெட்டிகள் விற்பனைக்கு வந்துள்ளது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
பாளையங்கோட்டை, முருகன்குறிச்சி என்ற இடத்தில் உள்ள இமார்ட் இந்திய லிமிட்டெட் என்ற டிவி விற்பனைக் கடைக்குச் சென்ற இளங்கோ என்பவர் அங்கு 14 இன்ச் டிவி ஒன்றை ரூ. 2,470 கொடுத்து வாங்கினார்.
டிவியை வீட்டுக்கு எடுத்து வந்து பார்த்த அவர், டிவியின் மேல் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் உதிர்ந்தைத் பார்த்து அதை பிரித்துப் பார்த்தபோது, அங்கு தமிழக அரசின் கோபுர இலச்சினை இருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்.
அரசு வழங்கும் இலவச டிவிதான் அது என்பதை அறிந்து அதிர்ந்த அவர் கடைக்குச் சென்று எனக்கு டிவி வேண்டாம், பணத்தைத் திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர்கள் பணத்தைக் கொடுக்க மறுத்து விட்டனர்.
இந்த டிவிக்கு பில்லும் கொடுத்துள்ளனர் அந்தக் கடைக்காரர்கள். இதுகுறித்து கடையின் மேலாளர் பிரபாகர் கூறுகையில், இதுவரை 15 டிவிக்களை விற்றுள்ளோம். நாங்கள் வீடியோகான் நிறுவனத்தின் அதிகாரபூர்வ டீலர் (இந்த நிறுவனம்தான் தமிழக அரசுக்கு இலவச கலர் டிவி பெட்டிகளைத் தயாரித்துக் கொடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது)என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், அரசுக்கு வழங்க வேண்டியதை விட கூடுதலாக டிவி பெட்டிகளைத் தயாரித்து விட்டதால், மிச்சம் உள்ளவற்றை விற்பனைக்கு அனுப்பியுள்ளனர். எனவே அவற்றை விற்பதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.
ஆனால் அரசுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட டிவியை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்று தமிழக அரசின் எல்காட் நிறுவன நிர்வாக இயக்குநர் உமா சங்கர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.பிரகாஷைத் தொடர்பு கொண்ட உமாசங்கர் இதுகுறித்து விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து ஆட்சித் தலைவர் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்த விசாரணையில், அரசுக்காக வழங்கப்படவிருந்த 400 டிவி பெட்டிகளை தவறுதலாக விற்பனைக்கு அனுப்பி விட்டதாக வீடியோகான் நிறுவனம் தெரிவித்ததாக கூறப்பட்டது.
இருப்பினும் இந்த விற்பனை தவறானது என்று கூறியுள்ள உமாசங்கர் இதுதொடர்பாக வீடியோகான் நிறுவனம் மீதும், விற்பனையாளர் மீதும் உரிய விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். முதல்வருக்கும் இதுதொடர்பாக அறிக்கை அனுப்பவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசின் இலவச கலர் டிவி விற்பனைக்கு வந்தது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.