அப்பாவை அடித்தவர்களைப் பழிவாங்ககருணாநிதிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது!
சென்னை:ராஜாஜியின் சுதந்திராக் கட்சி இருந்த காலத்தில், தனது அப்பாவை சில திமுகவினர் தாக்கியதால், அதற்குப் பழிவாங்கும் வகையில் முதல்வர் கருணாநிதி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ மெயில் அனுப்பிய மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவன அதிகாரியை சென்னை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 4ம் தேதி முதல்வர் கருணாநிதியின் அலுவலகத்திற்கு இ மெயில் மூலம் மிரட்டல் வந்தது. அதில், முதல்வர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், வீடு தகர்க்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து அதிகாரிகள் துரித கதியில் செயல்பட்டு முதல்வர் வீட்டில் சோதனை போட்டனர். ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இ மெயில் மூலம் புரளி கிளப்பிய நபரைப் பிடிக்க போலீஸார் வலை விரித்தனர்.
சம்பந்தப்பட்ட மிரட்டல் இமெயில், எங்கிருந்து வந்தது என்பதை சைபர் கிரைம் போலீஸார் ஆராய்ந்தனர். இதில் அந்த மெயில் மும்பையிலிருந்து அனுப்பப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து உதவி ஆணையர் சுதாகரன் தலைமையிலான போலீஸ் படை மும்பை விரைந்தது.
அங்கு இமெயில் அனுப்பிய நபரை கண்டுபிடித்துக் கைது செய்தனர். அந்த நபரின் பெயர் சுப்ரமணி (52). தனியார் உர நிறுவனத்தில் மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்து வருகிறார். மனைவி, மகன், மகள் உள்ளனர். மகள் அமெரிக்காவில் படிக்கிறார். சொந்த ஊர் நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி.
எதற்காக மிரட்டல் மெயில் அனுப்பினீர்கள் என்று போலீஸார் சுப்ரமணியிடம் விசாரித்தபோது, எனது தந்தை சூரிய நாராயணன் ராஜாஜியின் சுதந்திராக் கட்சியில் இருந்தவர். அப்போது அவரை சில திமுகவினர் அடித்து விட்டனர்.
எனது தந்தை தாக்கப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையிலேயே முதல்வர் வீட்டுக்கு மிரட்டல் விடுத்தேன். நான் மும்பையில் இருப்பதால் யாரும் என்னை கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால் மாட்டிக் கொண்டு விட்டேன் என்று கூறியுள்ளார் சுப்ரமணி.
சென்னைக்கு அவரை அழைத்து வந்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications