அதிமுக எம்.எல்.வீடு சூறை: ஜெ. கண்டனம்
சென்னை:தி.நகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ வி.பி.கலைராஜன் வீடு சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
சட்டசபையில், மறைந்த தலைவர்களைப் பற்றி அவதூறாகப் பேசக் கூடாது என்று மரபு உள்ளது. ஆனால் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேசிய தகாக வார்த்தைகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்திய கழக உறுப்பினர்கள் அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், அதில் நான்கு உறுப்பினர்களை இக்கூட்டத் தொடர் முழுவதும் நீக்கி வைத்திருக்கிறார்கள்.
இதன் தொடர்ச்சியாக தென் சென்னை மாவட்ட கழகச் செயலாளரும், தி.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.பி.கலைராஜனின் சொந்த ஊரான ஓரத்தநாட்டில், உள்ள அவரது வீட்டை 5.4.2007 அன்று நள்ளிரவு 50க்கும் மேற்பட்ட ரவுடிக் கும்பல் சூழ்ந்து கொண்டு கற்களையும், ஆயுதங்களையும் கொண்டு சேதப்படுத்தியுள்ளது.
கலைராஜனின் தந்தைக்குக் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இத்தாக்குதலின்போது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவில் நடந்த இந்தத் தாக்குதலைக் கண்டு அதிர்ச்சியுற்ற ஊர் பொதுமக்கள் திரண்டு வந்ததால் அடாவடிக் கும்பல் தப்பி ஓடி விட்டது. இதன் பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுக அரசின் பாசிச பழிவாங்கும் போக்கையே இந்த நடவடிக்ைக காட்டுகிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications