சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கும்நில உச்சவரம்பு தேவை: டாக்டர் ராமதாஸ்
சென்னை:சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்போருக்கும் நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைப்பது தொடர்பாக மத்திய அமைச்சரவை புதிய பரிந்துரைகளை அறிவித்துள்ளது.
இனிமேல் பொருளாதார மண்டலங்களுக்குத் தேவையான நிலத்தை கையகப்படுத்தும் வேலையை மாநில அரசுகள் செய்யக் கூடாது என்பது இதில் முக்கியமான ஒன்று.
தேவைப்படும் நிலத்தை பொருளாதார மண்டலத்தில் நிறுவனங்கள் அமைக்க உள்ளவர்களே முயன்று பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இது வரவேற்புக்குரியது.
ஆனால், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக தேவைப்படும் நிலத்தின் அளவு 5,000 ஹெகடேர் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுதான் சற்றே இடிக்கிறது. அதாவது 5000 ஹெக்டேர் என்பது 12 ஆயிரம் ஏக்கர். இதில் பாதியளவு நிலத்தை உற்பத்தித் தேவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு கூறுகிறது.
அப்படியானால், மீதம் உள்ள நிலத்தை ரியல் எஸ்டேட் போன்றவற்றுக்கு பயன்படுத்தக் கூடிய ஆபத்துக்கள் உள்ளன. இதனால் விவசாய நிலங்களை வாங்கி வீடு கட்டி விடும் முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்தான் அதிக அளவில் சிறப்பு பொருளாதார மையங்களை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. இவற்றுக்கு 25 ஏக்கர் நிலம் போதுமானது. 5000 ஹெக்டேர் அளவுக்கு இவற்றுக்கு நிலம் தேவையில்லை.
எனவே நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் சிறப்பு பொருளாதார மண்டலங்களையும் கொண்டு வர வேண்டும். அவர்களுக்கும் நில உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் முறையை மீண்டும் கொண்டு வர அரசே காரணமாகி விடும் அபாயம் உள்ளது.
அதேபோல சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக நிலம் கொடுக்க முன்வரும் விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அந்த நிறுவனம் வேலை தர வேண்டும். நிலப் பதிவின்போதே இதுதொடர்பான வேலை நியமன உத்தரவையும் அந்த நிறுவனம் வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications