பெண் கற்பழித்துக் கொலை-மில் அதிபருக்குஆயுள்- இன்ஸ்பெக்டருக்கு கடுங்காவல்
சென்னை:கோவையில், இளம்பெண்ணைக் கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்த வழக்கில் கோவை நீதிமன்றத்தால் நிரபராதி என விடுதலை செய்யப்பட்ட மில் அதிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.
கோவையில் மில் வைத்திருப்பவர் ரத்னம். இவரது மில்லில் வேலை பார்த்து வந்த சித்ரா என்ற பெண் கடந்த 1995ம் ஆண்டு கற்பழித்துக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சுந்தரசாமி என்பவர் போலீஸில் சரணடைந்தார். ஆனால் அவர் போலி குற்றவாளி என்று கூறி சித்ராவின் தாயார் கோவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து மில் அதிபர் ரத்னம் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அனைவர் மீதும் கோவை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் யார் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரம் இல்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்தது கோவை நீதிமன்றம்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இன்று நீதிபதிகள் பாலசுப்ரமணியம், ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது.
அதில், நிரபராதி என கோவை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ரத்னத்திற்கு, சித்ராவைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், இன்னொரு குற்றப் பிரிவில் 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் சித்ராவின் தாயார் பெயரில் ஏதாவது ஒரு தேசிய வங்கியில் ரூ. 2 லட்சம் பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் ரத்னத்திற்கு உத்தரவிடப்பட்டது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் குற்றவாளி ரத்னத்தை தப்ப விட முயன்ற இன்ஸ்பெக்டர் அன்பழகன், குற்றத்தை மறைக்க உதவிய தனுஷ்கோடிக்கு தலா 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
போலி குற்றவாளி சுந்தரசாமிக்கான தண்டனை குறித்த விவரம் இன்று மாலை அறிவிக்கப்படும் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications