அரை இறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து
ஜார்ஜ்டவுன்:அயர்லாந்துக்கு எதிரான போட்டியில், 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது நியூசிலாந்து.
உலகக் கோப்பைப் போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத அணி நியூசிலாந்து. நேற்று ஜார்ஜ்டவுனில் நடந்த போட்டியில் அயர்லாந்து அணியை சந்தித்தது.
வெற்றி பெறக் கூடிய வாய்ப்பு இல்லாவிட்டாலும் கூட, போராடக் கூடிய அணி என்பதால் நேற்றைய போட்டியை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் கவனத்துடன் அயர்லாந்தை சந்தித்தது நியூசிலாந்து.
முதலில் நியூசிலாந்து பேட் செய்தது. தொடக்க ஆட்டக்காரர் பீட்டல் புல்டன் சிறப்பாக ஆடி 83 ரன்களைக் குவித்தார். பிரன்டன் மெக்கல்லம் 37 பந்துகளில் 47 ரன்களைக் குவித்தார். இவரும், ஜெம்ஸ் பிராங்க்ளினும் (34 நாட் அவுட்) இணைந்து 71 ரன்களைச் சேர்த்தனர்.
ஆரம்பத்தில நிதானமாக ஆடிய நியூசிலாந்து வீரர்கள், அதன் பின்னர் அடித்து ஆடினர். கடைசி ஐந்து ஓவர்களில் மட்டும் 59 ரன்களைச் சேர்த்தனர்.
இறுதியில் 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுக்களை இழந்து 263 ரன்களைச் சேர்த்தது நியூசிலாந்து.
பின்னர் ஆடிய அயர்லாந்து ரன் எடுக்க முடியாமல் தடுமாறியது. ஓபிரையன் மட்டுமே சற்று தாக்குப் பிடித்து ஆடி 49 ரன் எடுத்தார். மற்ற யாரும் சொல்லிக் கொள்ளும்படி ரன் எடுக்கவில்லை.
37.4 ஓவர்களிலேயே அயர்லாந்தின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 134 ரன்களை மட்டுமே எடுத்து 129 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது அயர்லாந்து.
இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 8 புள்ளிகளுடன் அரை இறுதிக்குள் நுழைகிறது.