இந்து-முஸ்லீம் கலப்பு திருமணங்களை ஆதரிக்க வேண்டும்: தஸ்லீமா
போபால்:இந்து-மூஸ்லீம் கலப்புத் திருமணங்களை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என வங்கதேச எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் கூறியுள்ளார்.
இஸ்லாம் குறித்து அவர் எழுதிய சர்ச்சைக்குள்ளான நாவலையடுத்து அவருக்கு எதிராக வங்கதேசத்தில் பத்வா பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் நாட்டைவிட்டு வெளியேறினார். இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்த அவர் சமீபகாலமாக பலத்த பாதுகாப்புடன் இந்தியாவில் தங்கியுள்ளார்.
இந் நிலையில் போபாலில் உள்ள பாரத் பவன் பல் கலை மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு அவர் பேசுகையில்,
இந்தியாவில் இந்து பெண்ணும் மூஸ்லீம் ஆணும் திருமணம் செய்துக் கொண்டு படும் துனபங்களை கண்டால் வருத்தம் தான் வருகிறது.
இது போன்ற திருமணங்களை எதிர்ப்பதற்கு பதிலாக வரவேற்று ஆதரிக்க வேண்டும்.
ஒவ்வொருவருக்கும் அவருடைய வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் உரிமையுண்டு என்றார்.
இதுபோன்ற திருமணங்களுக்கு வங்காளதேசம் அனுமதிக்குமா அல்லது எதிர்ப்பு தெரிவிக்குமா என கேட்டதற்கு, என் சகோதரர் இந்து பெண்ணைத் திருமணம் செய்து கொண்டதற்கு அங்கும் எதிர்ப்பு தான் கிளம்பியது என்றார்.
மற்றொரு கேள்விக்க பதிலளிக்கையில், இன்னும் நான் வங்காள தேச குடிமகள்தான். ஆனால் அங்கே செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நான் 12 வருடம் ஐரோப்பாவில் இருந்தேன். நாட்டை விட்டு வேறு கலாச்சாரத்தில் வாழ்வது மிக சிரமமாக இருக்கிறது என்றார்.