தோல்விகளைத் துடைக்கும் கவிதை!
சென்னை:கவிதைகள் தோல்விகளைத் துடைக்க உதவும். இலக்கியம், தற்கொலைகளைத் தடுக்க உதவும் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டம் பெற்றதற்காக வைரமுத்துவுக்கு சென்னையில் பாராட்டு விழா நடந்தது.
![]() |
நிகழ்ச்சியில், பல்கலைக்கழக துணைவேந்தர் பழனிச்சாமி, நடிகர் விவேக், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம், சென்னை காவல்துறை இணை ஆணையர் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வைரமுத்து ஏற்புரை நிகழ்த்துகையில், இலக்கியமும், கவிதையும் என்ன செய்யும் என்று கேட்கிறார்கள். அவை என்னவெல்லாம் செய்யும் தெரியுமா
தற்கொலைக்குப் போகிறவனை தடுத்து நிறுத்துகிறது இலக்கியம். தோல்விகளைத் துடைத்து தூக்கி நிறுத்துவது கவிதை.
வாழ்வின் வெற்றிடங்களைத் தன்னை ஊற்றி நிரப்புகிறது இலக்கியம். நசிந்து கிடக்கும் சமூகத்திற்கு நம்பிக்கை கொடுக்கிறது இலக்கியம்.
விருதுகளும், பாராட்டுக்களும் பலரை முற்றுப்புள்ளி ஆக்கி விடுகிறது. நான் அப்படி அல்ல, ஓடிக் கொண்டே இருப்பேன். இதுவரை எழுதிய படைப்புகளை பயிற்சியாக நினைக்கிறேன். இனிமேல் எனது இலக்கிய முயற்சிகள் தொடரும்.
உணர்ச்சி வட்டத்துக்குள் வாழுகிற தமிழினம் அறிவு வட்டத்தை நோக்கி நகர வேண்டும். அதற்கு என் பேச்சும், எழுத்தும் பயன்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன்.
இந்தப் பாராட்டை நான் உற்சாக மாத்திரையாக எடுத்துக் கொள்வேனே தவிர போதை மாத்திரையாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றார் வைரமுத்து.













Click it and Unblock the Notifications