குன்னூரில் இந்திய-சீன அதிகாரிகள் பேச்சு
குன்னூர்:நீலகிரி மாவட்டம் குன்னூரில், இந்திய, சீன எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது.
இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பிரச்சினை தொடர்பாக பல கட்டங்களாக பேச்சு நடந்து வருகிறது. இதற்காக இரு நாடுகளையும் சேர்ந்த அதிகாரிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. பின்னர் அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினர். இதையடுத்து நேற்று குன்னூர் பேச்சுவார்த்தை தொடங்கியது.
குன்னூரில் அங்குள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்தப் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதையொட்டி குன்னூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைப் பகுதிகளிலும் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில், மத்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன், பாதுகாப்புத் துறை செயலாளர் தத்தா, வெளியுறவுத்துறை அதிகாரிகள், சீனாவுக்கான இந்தியத் தூதர் நிரூபமா ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக அவர்கள் டெல்லியிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் வந்தனர். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் குன்னூர் வந்தனர்.
சீன தரப்பில் அந்நாட்டு துணை அமைச்சர் டை பின்கோ, இந்தியாவுக்கான சீன தூதர் சான் யூ சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சீனக் குழுவினர் ஊட்டி மலையின் அழகை கண்டுகளிக்கும் வகையில் சாலை மார்க்கமாக குன்னூருக்கு வந்தனர்.
அருணாச்சல் பிரதேச மாநிலம், தவாங் பிராந்தியத்தில் 90,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான பகுதியை சீனா உரிமை கோரி வருகிறது. இதேபோல, காஷ்மீர் மற்றும் லடாக் பிராந்தியத்தில் சீனா ஆக்கிரமித்துள்ள 43 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியிலிருந்து சீனா வெளியேற வேண்டும் என இந்தியா கோரி வருகிறது. இந்த இரு பிரச்சினைகள் குறித்தும் குன்னூர் பேச்சுவார்த்தையின்போது விவாதிக்கப்படுகிறது.
குன்னூர் பேச்சுவார்த்தை முடிந்ததும் இரு குழுவினரும் டெல்லி செல்கின்றனர். அங்கு பேச்சுவார்த்தை குறித்த கூட்டறிக்கை வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications