நாட்டு குண்டுகளை வீசி திமுகவினர் மோதல்!!
விழுப்புரம்:விழுப்புரத்தில் நாட்டு வெடிகுண்டுளை வீசி திமுகவினர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் சித்தேரிக்கரையைச் சேர்ந்தவர் ராமசாமி. திமுகவைச் சேர்ந்தவர். அதே ஊரைச் சேர்ந்தவர் கதிர் என்கிற கதிரவன். திமுக தொண்டர் படையைச் சேர்ந்தவர். முன்பு ராமசாமியிடம் வேலை பார்த்து வந்தார் கதிர்.
இந்த நேலையில் சனிக்கிழமை மாலை சென்னை நெடுஞ்சாலையில் உள்ள தாபாவில் சாப்பிடச் சென்றார் கதிர். அங்கு ராமசாமி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதை தனது மகன் சக்திவேலிடம் போய்க் கூறினார் ராமசாமி. ஆத்திரமடைந்த சக்திவேல் தனது நண்பர்களுடன் சென்று கதிரை சரமாரியாகத் தாக்கினார்.
இதையடுத்து நேற்று அதிகாலை 3 மணியளவில் தனது ஆட்களுடன் கதிர், சக்திவேல் வீட்டுக்குச் சென்றார். கையில் நாட்டு வெடிகுண்டுகள், கட்டை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவர்கள் வந்தனர்.
சக்திவேல் வீட்டின் மீது வெடிகுண்டுகளை வீசித் தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அதிகாலை நேரத்தில் வெடிகுண்டுகள் வீசப்பட்டதால் அப்பகுதியில் வசித்து வருவோர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த வெடிகுண்டு வீச்சில் சக்திவேலின் வீடு லேசாக சேதமடைந்தது. போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது வெடிக்காமல் கிடந்த ஒரு நாட்டு வெடிகுண்டு தண்ணீர் ஊற்றி செயலிழிக்கச் செய்யப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீஸார் கைது செய்தனர். ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது. கதிர் உள்ளிட்டோர் தலைமறைவாகி விட்டனர்.












Click it and Unblock the Notifications