"எல்லாரும் நில்லுங்க.." மொத்த கூட்டமும் சைலண்ட்.. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விஜய் கரூர் நிகழ்ச்சி
கரூர்: தமிழ்நாடு முதல்வர் விஜய் கலந்து கொள்ளும் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி கரூரில் நடைபெறுகிறது. கரூரில் தேர்தலுக்கு முன்பு நடந்த கூட்ட நெரிசல் விபத்திற்குப் பிறகு விஜய் அங்கு செல்வது இதுவே முதல்முறை. தவெகவின் கடந்த கால நிகழ்ச்சிகளைப் போல இல்லாமல் இந்த முறை தமிழ்த்தாய் வாழ்த்துடன் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கியுள்ளது.
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்திற்குச் சென்றிருந்தார். அப்போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்திருந்தனர். இதற்கிடையே அந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு அரசு வேலை கொடுக்கும் நிகழ்வு மற்றும் கரூர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் விஜய் கரூர் சென்றுள்ளார்.

பெருந்திரளான மக்கள் கூட்டத்திற்கு நடுவே சென்ற விஜய், நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து விஜய் கரூர் சென்ற நிலையில், வழிநெடுகிலும் மக்கள் திரண்டிருந்து முதல்வர் விஜய்க்கு வரவேற்பு கொடுத்தனர்.
இந்த முறை தவெக நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் இருந்தது. எப்போதும் நிகழ்வில் விஜய் மட்டுமே பேசுவார். ஆனால், இந்த முறை மாவட்ட செயலாளர், மாவட்ட அமைச்சர், தொகுதி சட்டசபை உறுப்பினர் என அனைவருக்கும் பேச வாய்ப்பு தரப்பட்டது. அவர்கள் ஓரிரு நிமிடங்கள் பேசிய நிலையில், அதை மேடையில் இருந்தபடியே விஜய் கேட்டார்.
மேலும், குறிப்பாக இந்த நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. கடந்த காலங்களில் தவெக கட்சி நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாது. ஆனால், இந்த முறை தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. விஜய் மேடைக்கு வந்தவுடன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அமைச்சர் ராஜ்மோகன், "தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவுள்ளது. அனைவரும் எழுந்து நில்லுங்கள்" என்றார். அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட நிலையில், அதன் பிறகே நிகழ்ச்சி தொடங்கியது.
தவெக அரசில் தமிழ்த்தாய் வாழ்த்து குறித்த சில காலமாகவே சர்ச்சை இருக்கிறது. அதாவது முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்திருந்த நிலையில், ஆளுநர் மாளிகை நிகழ்ச்சி என்பதால் அப்படிப் பாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேநேரம் தமிழக அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தே பாடப்படும் என்று அமைச்சர்கள் விளக்கமளித்தனர். அதைத் தொடர்ந்து நடந்த அரசு நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்தே முதலில் பாடப்பட்ட நிலையில், இப்போது தவெக நிகழ்ச்சியிலும் தமிழ்த் தாய் வாழ்த்து முதலில் பாடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications