கரூர் கேஸ் சிபிஐயில் இருக்கும் போது.. அப்படியே போலீஸ் பக்கம் பழியை திருப்பிய விஜய்! ஆவேச அட்டாக்!
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் என் வாழ்நாளின் மிகப்பெரிய வலி. நான் எவ்வளவு பெரிய இடத்திற்குப் போனாலும் அந்த வலி என் நெஞ்சை விட்டு மாறாது. ஆனால், அன்று காவல்துறை நினைத்திருந்தால் அந்தப் பொதுக்கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம் என்று முதல்வர் விஜய் கரூரில் ஆவேசத்துடன் பேசி உள்ளார்.
41 பேரின் உயிரைப் பறித்த கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகக் கரூர் மண்ணில் கால்பதித்த விஜய் கரூர் விவகாரம் தொடர்பாக பேசினார்.

பெரம்பலூரில் எச்சரித்த போலீஸ், கரூரில் ஏன் செய்யவில்லை?
இன்று கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி ஆணைகளை வழங்கும் முன், மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எனக்கு அதிக வலியை தந்தது. எவ்வளவு பெரிய இடத்திற்கு போனாலும் அந்த வலி மாறாது. வாழ்வின் மிகப்பெரிய வலி.. காவல்துறை நினைத்திருந்தால் கரூர் கூட்டத்தை ரத்து செய்திருக்கலாம்.. கரூர் நெடுஞ்சாலையில் இருந்து கூட்டத்திற்கு அழைத்து வந்து காவல்துறை நாடகம் ஆடியது.
கரூர் சம்பவத்திற்கு முன்பு, நாங்கள் பெரம்பலூருக்கு வந்தபோது, கூட்டம் அதிகமாக இருக்கிறது என்று கூறி, வர வேண்டாம் என காவல்துறை எங்களுக்கு அறிவுறுத்தியிருந்தது. நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு, பெரம்பலூரில் நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என முடிவு செய்தோம்.
அதேபோல, நாமக்கல்லில் கூட்டத்தை முடித்த பிறகு நாங்கள் கரூருக்குப் பயணம் செய்வதற்கு முன்பு காவல்துறை எங்களை எச்சரித்திருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்ப வேண்டுமா? ஆனால் கரூரில் காவல்துறை எங்களை வரவழைத்தது. அவர்களே பாதுகாப்பு கொடுத்து எங்களை உள்ளே அழைத்து வந்தனர்.
நானும் நம்பி போய்விட்டேன். நம்பிட்டேங்க. போலீசார் சொன்னதை நம்பி உள்ளே சென்றுவிட்டேன். கரூர் சம்பவத்தின் மூளை யார்? கரூரில் என் அக்கா, தங்கைகளை இழந்தேன்.. குழந்தைகளை இழந்தோம்.. அந்த பழியை எங்கள் மீது தூக்கி போட்டீர்கள்.. வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? நமக்காக வந்துள்ள மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடுபவன் நான் அல்ல.. பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம்.
ஒவ்வொரு முகமூடியாக கிழிகிறது.. திரும்பிய பக்கம் எல்லாம் கதறல்.. கதறல்.. கதறல்.. கட்சி நிதி என்றதுமே எடுத்தார்கள் பாருங்க ஓட்டம்.. குற்றமுள்ள நெஞ்சு தான் குறுகுறுக்கும்.. எந்தக் கட்சி என்று கூட நான் சொல்லவில்லை. எங்க அப்பா பீரோவுக்குள் இல்லை என்பது போல் அவர்களின் செயல்பாடு உள்ளது, என்று கூறினார்.
சிபிஐ வழக்கு
கரூர் வழக்கை சிபிஐ விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணைக்கு இடையே அப்படியே புகாரை போலீசார் மீது திருப்பும் விதமாக விஜய் பேசி இருக்கிறார். அதாவது ஆக்டிவ் விசாரணை ஒன்றை பாதிக்கும் விதமாக ஒரு மாநில முதல்வரே.. தனது காட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறை மீதே புகாரை வைத்துள்ளார். முக்கியமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது அப்படியே போலீஸ் பக்கம் விஜய் புகாரை திருப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications