கல்குவாரி ஓணரிடம் கார் பரிசாக பெற்ற தவெக எம்எல்ஏ? ராதாபுரத்தில் அப்பாவுவை வீழ்த்தியவர் விளக்கம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் திமுகவின் முன்னாள் சபாநாயகர் அப்பாவுவை வீழ்த்தி வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர், கல்குவாரி அதிபர்களிடம் இருந்து பரிசாக கார் ஒன்றை பெற்றுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், தவெக எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் சதீஷ் கிறிஸ்டோபர். இவர் திமுக வேட்பாளராக களமிறங்கிய சட்டசபை முன்னாள் சபாநாயகர் அப்பாவுவை தோற்கடித்தார்.

இந்த தேர்தலில் சதீஷ் கிறிஸ்டோபர்மொத்தம் 69,947 ஓட்டுகள் வாங்கி வாகை சூடினார். திமுகவின் அப்பாவு 57,634 ஓட்டுகள் மட்டுமே பெற்று 12,313 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களாக ராதாபுரம் தவெக எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபருக்கு எதிராக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வருகிறது. அவர் தனியார் கல்குவாரி உரிமையாளரிடம் இருந்து பரிசாக கார் ஒன்றை பெற்றதாக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் இந்த விவகாரமும் பூதாகரமானது.
இந்நிலையில் தான் ராதாபுரம் தவெக எம்எல்ஏ சதீஷ் கிறிஸ்டோபர் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த வீடியோவில் சதீஷ் கிறிஸ்டோபர் கூறியுள்ளதாவது: ''மக்கள் அனைவருக்கும் வணக்கம்.. நான் டாக்டர் கிறிஸ்டோபர். ராதாபுரம் தொகுதியின் எம்எல்ஏ பேசுகிறேன். இப்போது 2 நாளாக என்னை பற்றி ஒரு அவதூறு பரப்பப்பட்டு வருகிறது. என்னை பற்றி ஒரு சில விஷயங்கள் சமூக வலைதளங்களில் பார்த்து இருப்பீர்கள். இது மாற்று கட்சியினரால் உருவாக்கப்பட்ட ஒரு விஷயம்.
இது முழுக்க முழுக்க பொய் மட்டுமே. இந்த அவதூறு பரப்புவதற்கான காரணம் உங்களுக்கு தெரியும். ஏனென்றால் இந்த ராதாபுரம் தொகுதியில் நிறைய நல்ல விஷயங்களை நாம் செய்து வருகிறோம். பொதுவாகவே நல்லது செய்வோருக்கு எதிராக அவதூறு வருவது என்பது சாதாரண விஷயம். என்னுடைய கார் நம்பரை வைத்து பார்த்தால் உங்களுக்கே உண்மை புரியவரும்.
இந்த காரை 7 ஆண்டுகளுக்கு முன்பு 2019ல் பதிவானது. இது என்னுடைய அப்பா பெயரில் பதிவு செய்யப்பட்டது. இந்த காரை தான் நான் லஞ்சமாக பெற்றதாக சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். ஒரு விஷயத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை இன்னொருவருக்கு பகிர்வது என்றால் அதனுடைய உண்மை தன்மையை அறிந்து பகிர வேண்டும் என்பதை கேட்டு கொள்கிறேன்.
அதேபோல் என்னுடைய பெயரை பயன்படுத்தி ராதாபுரம் தொகுதியில் பணம் கேட்டாலோ அல்லது ஏதாவது ஒரு காரியம் செய்து தருவதாக கூறினாலோ அதனை நம்ப வேண்டாம். என்னை பார்க்க வேண்டும் என்று நினைத்தால் ராதாபுரம் எம்எல்ஏ அலுவலகத்துக்கு வரலாம். அங்கு என்னை வந்து பார்க்கலாம்'' என்றார்.












Click it and Unblock the Notifications