"கொளத்தூரில் கொத்து பரோட்டோ போட்டுட்டாங்க".. கூட்டணி தலைவர்களை மதிக்காமல் மீண்டும் கேலி செய்த விஜய்
கரூர்: "நான் 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுட்டாங்க. இதற்கு மேல் பேசினால் மொத்தமாக முடிந்துவிடும் " எனப் பேசியுள்ளார் முதல்வர் விஜய். சட்டசபையில் ஸ்டாலினை விஜய் கிண்டல் செய்ததை கூட்டணி கட்சித் தலைவர்களே கண்டித்த நிலையிலும் இன்றும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கேலி செய்துள்ளார் விஜய்.
கரூரில் இன்று மக்கள் மத்தியில் பேசிய முதல்வர் விஜய், "நான் பேசவில்லை என்றால் வாயத் திறங்க சி.எம் என பேட்ஜ் குத்திக்கொண்டு வருகின்றனர். உங்க சி.எம்மை நெஞ்சிலேயே குத்திட்டு வந்தீங்களே அதெல்லாம் வேற லெவல். பேசுங்க பேசுங்கனு சொல்றீங்க.. நான் பேசுனா எந்திரிச்சு ஓடுறீங்க.. பேசுவதற்கு முன்பே வெளிநடப்பு செய்கின்றனர். இனி "மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே.. எல்லா கதவை இழுத்து மூடுங்கள்" எனச் சொல்லிவிட்டு தான் பேச வேண்டும். நான் 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூரில் கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள். இதற்கு மேல் பேசினால் மொத்தமாக முடிந்துவிடும் " எனக் கூறிள்ளார்.

"கொளத்தூரில் கொத்து பரோட்டோ போட்டுட்டாங்க" என மீண்டும் முன்னாள் முதல்வர் ஸ்டாலினை கேலி செய்துள்ளார் முதல்வர் விஜய். ஏற்கனவே, சட்டசபையில், "அப்பாவ காணோம்" என கேலி செய்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்திருந்தன. சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம், சிபிஐ மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களே, முன்னாள் முதல்வரை கேலி செய்ய வேண்டாம் எனக் கண்டித்தனர்.
சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், "யாரையும் தாழ்வு பாராட்டக்கூடாது.. யாரையும் உடல் மொழியால் கடந்து செல்லக் கூடாது. எவ்வளவுதான் நேர் எதிர் கருத்துகள் இருந்தாலும் பண்பு தவறிய கருத்துகளை சொல்ல கூடாது.. யார் தவறு செய்தாலும் தவறு.. அப்பாவை காணோம் என முதல்வர் சொன்னதில் ஏற்புடையது அல்ல.. மறுமொழியில் எதிர்க்கட்சித் தலைவர் சொன்னதும் ஏற்புடையது அல்ல.." எனத் தெரிவித்திருந்தார்.
சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், "தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது இயல்பானது. அதிலும் குறிப்பாகச் சட்டமன்றத்தில் இல்லாத ஒருவரைப் பற்றி, "அப்பாவைக் காணோம்" என்று கேலி செய்யும் வகையில் முதலமைச்சர் பேசியது மிகவும் தவறானது. இதற்கு எதிர்வினையாக, எதிர்க்கட்சித் தலைவர் "கணவனைத் தேடும் மனைவி" என்று பேசியதும் தவறுதான். "ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும், வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்" என்பதை உணர்ந்து இருதரப்பினரும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.
விசிக தலைவர் திருமாவளவன், "மு.க.ஸ்டாலின் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு இழந்ததை ஏளனம் செய்யும் வகையில் பேசியிருப்பது 'முதலமைச்சர்' என்னும் பொறுப்புக்குரிய மாண்புக்கு உகந்தது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். கட்சி மேடைகளில் பேசும்போதுகூட தவிர்க்க வேண்டிய ஒன்றை, சட்டப்பேரவையில் பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் சட்டப்பேரவைக்கான மரபையும் முதலமைச்சர் என்னும் மகத்தான பதவிக்குரிய உயரிய மாண்பையும் பேணிப் பாதுகாத்திட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
ஆனால், இன்றைக்கும் ஸ்டாலினை கேலி செய்து பேசியுள்ளார் விஜய். கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தலைவர்களின் பேச்சை மதிக்காமல் முதல்வர் விஜய், மீண்டும் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை கேலி செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.














Click it and Unblock the Notifications