"காலாகாலத்துக்கும் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தர பதிலடி கொடுக்க வேண்டும்" - விஜய் ஆவேசம்!
கரூர்: "நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்களை கொடுத்தவர்களுக்கு இந்த 2026 தேர்தலில் தகுந்த பதிலடியை கொடுத்துவிட்டீர்கள். ஆனால் அது மட்டுமே போதாது மக்களே.. காலாகாலத்துக்கும் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தர பதிலடியை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்." என தமிழக முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியான நிலையில், 9 மாதங்களுக்குப் பின், முதல்வர் ஜோசப் விஜய் தற்போது முதல்முறையாக கரூர் வந்துள்ளார். நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி ஆணை வழங்க இருக்கிறார்.

இந்நிலையில், மக்கள் மத்தியில் பேசிய விஜய், "கரூர் சம்பவத்தின் மூளை யார்? கரூரில் என் அக்கா, தங்கைகளை இழந்தேன்.. குழந்தைகளை இழந்தோம்.. அந்த பழியை எங்கள் மீது தூக்கி போட்டீர்கள்.. வாய் இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? நமக்காக வந்துள்ள மக்களை காக்க வைத்து ஆதாயம் தேடுபவன் நான் அல்ல..
நீங்கள் என் மீது பழியைத் தூக்கிப் போடுகிறீர்களா? வலியோடு வீட்டில் இருந்தவனை ஓடி ஒளிந்துவிட்டான் என்று சொன்னீர்கள். வாய் என ஒன்று இருந்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்களா? மக்களே உங்களையே கேட்கிறேன். அன்றைக்கு அவ்வளவு கூட்டம் இருந்ததே.. அதற்கேற்ற போலீஸ் பாதுகாப்பை கொடுத்தீர்களா?
இதில் வாய் கூசாமல் ஸ்டாலின் சார் சட்டசபையில் நம் மீது திருப்பிவிட்டு அங்கு ஒரு அரசியல் செய்கிறாரே.. அதற்கு என்ன அர்த்தம்? நம் எல்லோருக்கும் இத்தனை வலிகள், காயங்களை கொடுத்தவர்களுக்கு இந்த 2026 தேர்தலில் தகுந்த பதிலடியை கொடுத்துவீட்டீர்கள்.
ஆனால் அது மட்டுமே போதாது மக்களே.. காலாகாலத்துக்கும் எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு நிரந்தர பதிலடியை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி எல்லாம் செய்தால் நான் மக்களை விட்டு ஓடிவிடுவேன் என்ற நினைப்பா? பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம்." என ஆவேசமாகப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications