விஜய் போட்ட அரசியல் ஸ்கெட்ச்.. திமுக-அதிமுக கூட்டணி? கரூர் மேடையில் முதல்வர் சொன்ன பாயிண்டு
சென்னை: இன்று கரூரில் நடந்த மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக திமுகவை தீய சக்தி என்றும் அதிமுகவை தீர்ந்து போன சக்தி என்றும் பேசினார். இதற்கிடையே சைட் கேப்பில் இடைத்தேர்தல் தொடர்பாகவும் விஜய் பேசியிருந்த சில விஷயங்கள் திமுகவை இக்கட்டான சூழலில் தள்ளியுள்ளது.
கரூரில் கடந்தாண்டு நடந்த துயரத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது. அப்போது வேலுச்சாமிபுரத்தில் விஜய் பிரச்சாரம் செய்ய வந்தார். திடீரென அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்திருந்தனர். இந்தியாவிலேயே பிரச்சார நிகழ்வில் இவ்வளவு பெரிய உயிரிழப்பு நடப்பதில்லை. அவ்வளவு மோசமான சம்பவமாக அது இருந்தது.

விஜய்
இதற்கிடையே இன்றைய தினம் விஜய் அதே கரூர் பகுதிக்குச் சென்றுள்ளார். முதலில் கரூரில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய், தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோருக்கு அரசு வேலையையும் தருகிறார். இதற்காகக் கரூரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், திமுகவை மிக கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
முதலில் கரூர் கூட்ட நெரிசல் குறித்து விஜய் விளக்கமளித்தார். கரூரில் கூட்டம் இருப்பதை போலீசார் தனக்கு எச்சரிக்கவில்லை என்ற முதல்வர் விஜய், ஏதோ சரியில்லை என்பதை போலீசார் உணர்ந்திருந்தால் கூட்டத்தையே ரத்து செய்திருக்கலாமே என்றும் பொய் சொல்லி தன்னை நம்ப வைத்ததாகக் குற்றஞ்சாட்டினார். மேலும், யார் சொல்லி போலீஸ் இதையெல்லாம் செய்தது என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், திமுகவை தீய சக்தி என்றும் அதிமுகவை தீர்ந்து போன சக்தி என்றும் அவர் சாடினார்.
கூட்டணி?
குறிப்பாக ஒரு இடத்தில் விஜய், "இந்த தீய சக்தியும் தீர்ந்து போன சக்தியும் வேறு வேறு இல்லை. இருவரும் கூட்டுக் களவாணிகள். எங்களுக்குள் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்பதை நிரூபிக்க முடியுமா.. வரப்போகும் இடைத்தேர்தலில் அதை நிரூபிக்கச் சொல்லுங்கள்" என்றார். விஜய்யின் இந்த பேச்சு கவனத்தை ஈர்ப்பதாகவே அமைந்துள்ளது.
பின்னணி
ஏனென்றால் தேர்தல் முடிவுகள் வெளியான போதே, திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க முயன்றதாகப் பலரும் குறிப்பிடுகிறார்கள். திமுக இதைத் திட்டவட்டமாக மறுத்தாலும் கூட, மாற்று கட்சியைச் சேர்ந்த பலரும் திமுகவும் அதிமுகவும் கூட்டணி அமைக்க முயன்றதாகவே சொல்கிறார்கள். விஜய் ஆட்சியைப் பிடிப்பதைத் தடுக்க இதுபோல பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியை அமைக்கும் திமுக வெளியில் இருந்து ஆதரவு தர முடிவு செய்யப்பட்டதாம். முதல் நாள் எடப்பாடி முதல்வர் என்றும் அடுத்த நாள் திருமாவளவன் முதல்வர் என்றும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகப் பல தலைவர்கள் கூறிவிட்டனர்.
இந்தச் சூழலில் தான் விஜய்யின் பேச்சு கவனிக்க வைப்பதாக இருக்கிறது. ஏனென்றால் அதிமுக நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது. ஏற்கனவே அதிமுகவின் பல முக்கிய தலைவர்கள் அங்கிருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகிவிட்டனர். வரும் நாட்களில் மேலும் பல தலைவர்கள் தவெக பக்கம் வருவார்கள் என்றே தெரிகிறது. இந்தச் சூழலில் அதிமுகவை உயிர்ப்புடன் வைக்க எதாவது ஒரு தேர்தலில் கணிசமான வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
இக்கட்டான சூழல்
இதன் காரணமாகவே இடைத்தேர்தலில் திமுகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கலாம் என சொல்லப்படுகிறது. இப்படி நேர் எதிராக இருந்தவர்கள் தேர்தலில் கைகோர்ப்பது அதிசயம் என்றாலும் இந்தியாவில் நடந்ததே இல்லை என சொல்ல முடியாது. டெல்லி, பீகார் தொடங்கிப் பல உதாரணங்கள் உள்ளன. அப்படி திமுகவும் அதிமுகவும் சேர்ந்தால் அது தவெகவுக்கு சற்று கூடுதல் சவாலாகவே இருக்கும். இதற்கிடையே தான் விஜய் அதை பற்றி பேசி செக் வைத்திருக்கிறார். வெளியே நேர் எதிராக இருப்பது போல நடித்தாலும் இருவரும் இடைத்தேர்தலில் கூட்டணி அமைக்கலாம் என்றும் முடிந்தால் இதை பொய் என நிரூபியுங்கள் என சவாலும் விடுத்திருக்கிறார்.
இது திமுகவுக்கும் சிக்கலான ஒரு இடம் தான். ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவில்லை என்றால் தவெக எதிர்ப்பு வாக்குகள் பிரியும். அது ஆளும் தரப்புக்கு சாதகமாக முடியும். அதேநேரம் கூட்டணி அமைந்தால் இவர்கள் முன்பே கூட்டணிக்கு பேசினார்கள் என்று விஜய் தரப்பு மேலும் பிரச்சாரத்தை வலுப்படுத்தும். இதனால் திமுக இந்த நிலைமை எப்படி கையாளும் என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டி இருக்கிறது.














Click it and Unblock the Notifications