இலங்கைக்கு இந்தியா ஆயுதம்: பாமக-காங்கடும் மோதல்: தடுக்க நடவடிக்கை- கருணாநிதி
சென்னை:இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குவது குறித்த செய்திகள் உண்மையாக இருந்தால் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் முதல்வர் கருணாநிதி உறுதியளித்தார்.
இது தொடர்பாக சட்டசபையில் பாமக பிரச்சனை கிளப்பியது. அக் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி பேசுகையில்,
இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குவதாக செய்திகள் வருகின்றன. இதன் மூலம் இலங்கைக்கு ஆயுதம் தர மாட்டோம் என்ற உறுதிமொழியை மத்திய அரசு மீறிவிட்டது.
ஏற்கனவே இலங்கைக்கு பாகிஸ்தானும் சீனாவும் ஆயுதங்கள் தந்து வருகின்றன. ஆனால், அங்கு கொடூரமான முறையில் கொல்லப்பட்டு வரும் தமிழர்களை பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.
இலங்கையில் நிலவும் அசாதாரணமான சூழ்நிலை குறித்து ஐ.நா. பொதுச் செயலாளரும் போப்பாண்டருமே கூட கவலை தெரிவித்துள்ளனர். இதனால் இலங்கைக்கு ஆயுதம் வழங்கக் கூடாது என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார் மணி.
இதையடுத்து மணிக்கு பதிலளிக்க காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சனம் முயன்றார். இதற்கு பாமக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பதிலுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களும் குரல் தந்தனர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
பின்னர் பேசிய சுதர்சனம், மத்திய அரசில் பங்கேற்றுள்ள பாமக இந்த பிரச்சனையை அங்கேேய கிளப்பலாம். மத்திய அமைச்சரவைக் கூட்டங்களில் பாமகவைச் சேர்ந்த மந்திரிகள் இந்த விவகாரத்தை கிளப்பலாம்.
மேலும் பிரதமரையும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் பாமக தலைவர்களுக்கு உள்ளது. அதையெல்லாம் விட்டுவிட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக கோருவது நகைப்பாக உள்ளது.
இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை காங்கிரஸ் ஒருபோதும் ஆதரித்ததில்லை. அதே நேரத்தில் தீவிரவாத அமைப்பான எல்டிடிஈயையும் காங்கிரஸ் ஆதரிக்காது என்றார்.
இதையடுத்துப் பேசிய பாமக எம்எல்ஏ மணி, இந்த விவகாரம் குறித்து பிரதமரிடம் ஏற்கனவே எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சோனியா காந்திக்கும் எடுத்துச் சொல்லியிருக்கிறோம். ராஜிவ் காந்தியின் கொலையை பாமக மிகக் கடுமையாக கண்டிக்கிறது.
இலங்கையில் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்களை காக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு என்றார்.
அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், இலங்கை விவகாரம் என்பது வெளிநாட்டு பிரச்சனை அல்ல. அது தமிழர்கள் பிரச்சனை. இதனால் இதில் மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் இப்போதைய நிலை சரியல்ல என்றார்.
இந்த விவாதங்களுக்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, இலங்கைக்கு ஆயுதம் தர மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் வேறு விதமாக உள்ளன. இந்த செய்திகளின் உண்மை நிலையை அறிந்த பின்னர், இந்த விஷயத்தில் நாம் ஒற்றுமையாக நமது கருத்தை மத்திய அரசிடம் திட்டவட்டமாக எடுத்துச் சொல்வோம்.
இலங்கை ராணுவத்துக்குத் தரப்படும் ஆயுதங்கள் தமிழர்களை கொடுைமப்படுத்தவே உதவும் என்பதால், இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய உரிமை நமக்கு உண்டு என்றார்.
மத்திய அரசுக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவும் காங்கிரசும் சட்டசபையில் மோதிக் கொண்டது இதுவே முதல் முறையாகும்.












Click it and Unblock the Notifications