காங்.பேச்சு-மதிமுக கோபம்-சட்டசபையில் அமளி
சென்னை:விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தரும் மதிமுகவைத் தடை செய்ய வேண்டும் என்று சட்டசபையில் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியதால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
சட்டசபையில் நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் உறுப்பினர் அருள் அன்பரசு பேசுகையில், தமிழக மண்ணில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அவரைக் கொன்றது விடுதலைப் புலிகள்.
அப்படி இருந்தும் சில கட்சிகள், சில அமைப்புகள் விடுதலைப் புலிகளை பகிரங்கமாக ஆதரித்து வருகின்றன.
சமீபத்தில் செந்தூர் கிராமத்தில் குண்டு வெடித்து 17 பேர் கொல்லப்பட்டனர். அதேபோல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெருமளவில் ஆயுதங்களும், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இவையெல்லாம் விடுதலைப் புலிகளுக்காக கடத்தப்பட்டவையாகும்.
இந்த நடவடிக்கைகளை பார்க்கும்போது தமிழகத்தில், தேசவிரோத சக்திகள் தலை தூக்க ஆரம்பித்து விட்டதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ராஜீவ் காந்தி என்ற துடிப்பான ஒரு தலைவரை நாம் இழந்து விட்டோம். ரோஜாவின் ராஜாவாக திகழ்ந்த அவரை தீவிரவாத செயலுக்குப் பலி கொடுத்து விட்டோம்.
எனவே விடுதலைப் புலிகளுக்கு பகிரங்கமாகவும், மறைமுகமாகவும் ஆதரவு தரும் மதிமுக போன்ற கட்சிகள் மற்றும் அமைப்புகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுத்து தடை செய்ய வேண்டும் என்றார்.
இதைக் கேட்டதும் மதிமுக எம்.எல்.ஏக்கள் எழுந்து அருள் அன்பரசுவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரது பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கோரினர்.
ஆனால் அதைக் கண்டுகொள்ளாத அருள் அன்பரசு தொடர்ந்து பேசினார். அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த துணை சபாநாயகர் வி.பி.துரைசாமி, அருள் அன்பரசுவின் பேச்சை ஆராய்ந்து தனது தீர்ப்பை பின்னர் தெரிவிப்பதாக கூறினார்.
பின்னர் சபாநாயகர் ஆவுடையப்பன் இருக்கைக்குத் திரும்பினார். அப்போது மதிமுக உறுப்பினர் கம்பம் ராமகிருஷ்ணன் எழுந்து சென்று சபாநாயகரிடம் அருள் அன்பரசுவின் பேச்சு குறித்து தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அருள் அன்பரசுவின் பேச்சிலிருந்து சில பகுதிகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். அத்தோடு பிரச்சினை முடிவுக்கு வந்தது.