இந்தியில் பேசுவதா? ஜெ.வுக்கு செஞ்சி கண்டனம்
சென்னை:அண்ணாவின் பெயரில் உள்ள கட்சியின் தலைவராக இருந்து கொண்டு இந்தியில் பேசியதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் ஜெயலலிதாவுக்கு போட்டி மதிமுக பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பெரியாரின் எண்ணத்திற்கு விரோதமாக, அண்ணாவின் பெயரை கட்சிக்கு வைத்துக் கொண்டு, அண்ணாவின் கொள்கைக்கு துரோகமாக, தமிழ் காக்க உயிர் நீத்த எண்ணற்ற தியாகிளுக்குக் களங்கமாக, ஜெயலலிதா உத்தரப் பிரதேச தேர்தல் பிரசாரத்தில் இந்தியில் பேசியுள்ளார்.
இது தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு அவர் இழைத்த துரோகமாகும். இந்தி ஆதிக்கத்தை விரட்டி அடித்த தமிழ்நாட்டிலிருந்து உ.பிக்குப் போய் இந்தியில் பேச காரணம் என்ன? ஆங்கிலத்தில் பேசி இந்தியில் மொழி பெயர்த்தால் ஒத்துக் கொள்ள மாட்டார்களா? அல்லது தமிழில் பேசி இந்தியில் மொழி பெயர்த்தால் ஒத்துக் கொள்ள மாட்டார்களா?
தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களுக்கு விரோதமாக ஈழத் தமிழர்களுக்கு விரோதமாக சேது சமுத்திரத் திட்டத்திற்கு எதிராக செயல்படும் ஜெயலலிதா, இந்தியில் பேசியது கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் செஞ்சி.