கம்ப்யூட்டர் உதிரிபாக குடோனில் தீ விபத்து
சென்னை: கம்ப்யூட்டர் உதிரிபாக குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 5 லட்சம் பெறுமானமுள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
அண்ணாசாலையிலுள்ள ரிச்சி சாலையில் 2 மாடி கட்டிடத்தில் கம்யூட்டர் குடோன் உள்ளது. இதில் நேற்றிரவு புகை வந்ததையடுத்து போலீஸ் மற்றும் காவலாளி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார்.
உடனே தீயணைப்பு துணை இயக்குனர் மதுரபாண்டியன் தலைமையில் 13 தீயணைப்பு வாகனங்களுடன் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். இவர்கள் வருவதற்குள் குடோனில் தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. குடோன் ஷட்டர் இறுகியதால் திறக்கமுடியவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் ஷட்டரை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர்.
ஆனால் குடோன் முழுவதும் புகைமண்டலமாக இருந்ததால் உள்ளே செல்லமுடியவில்லை. அதனால் நவீன கருவி மூலம் புகை வெளியேற்றப்பட்டது. பின்னர் வீரர்கள் கவச உடைகள் அணிந்து குடோன் உள்ளே சென்று தீயை அணைத்தனர். 4 மணிநேரம் போராடி இந்த தீயை அணைத்தனர். அருகிலுள்ள கடைகளும் தீப்பிடிக்காமல் காப்பாற்றினர்.
இந்த தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் எரிந்து சாம்பலாயின. இரவு நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் துணை கமிஷ்னர் ராமசுப்ரமணி உத்தரவின் பேரில் சிந்தாதிரிபேட்டை இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த தீவிபத்து மின்சார கோளாறு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்ற போதிலும் நாசவேலை காரணமாக இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications