4 தொகுதிகளில் போட்டி-ஜெ.வுக்கு நோட்டீஸ்
சென்னை: சட்டசபை தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்டது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சென்ைன உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா புவனகிரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ஆண்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட மனுதாக்கல் செய்தார்.
ஆனால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 தொகுதிக்கு மேல் போட்டியிட முடியாது என்பதால் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்ததை எதிர்த்து திமுக எம்.பி. செ.குப்புசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. தற்போது இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தன்னையும் ஒரு பிரிதிவாதியாக சேர்க்க வேண்டும் என ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். அவரை இந்த வழக்கில் சேர்க்க கூடாது என குப்புசாமியும் ஒரு மனு தாக்கல் செய்தார்.
நீதிபதிகள் தர்மராவ், பழனிவேல் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை ஏற்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாளைக்குள் தனது பதில் மனுவை ஜெயலலிதா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications