ஜெயா டிவிக்கு மிரட்டல் விடுத்தவர் சிக்கினார்?
திருநெல்வேலி:ஜெயா டிவி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக தெரிகிறது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும், ஜெயா டிவிக்கும் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதேபோல மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், மதுரை சித்திரைத் திருவிழா ஆகியவற்றிலும் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் என மிரட்டல் கடிதங்கள் வந்தன.
இவை அனைத்தையும் ஒரே நபரே அனுப்பியிருப்பதாக போலீஸார் சந்தேகித்தனர். ஜெயா டிவிக்கு வந்த, மிரட்டல் கடிதத்தில் வெங்கடேசன், என்.ஜி.ஆ. நியூ காலனி, பாளையங்கோட்டை, நெல்லை என்ற முகவரி இருந்தது.
இதையடுத்து நெல்லை போலீஸ், புலனாய்வுப் பிரிவு, கியூ பிரிவு போலீஸார் அந்த முகவரிக்கு விரைந்தனர். ஆனால் வீடு பூட்டிக் கிடந்தது. ஆனால் அந்த முகவரியில் வெங்கடேசன் என்பவர் வசிப்பதை அக்கம் பக்கத்து வீடுகளில் கேட்டு உறுதி செய்து கொண்டனர் போலீஸார்.
அவர் எங்கு போயுள்ளார் என்பதை அறிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் வெங்கடேசன் சிக்கினார். வெங்கடேசன் ஏற்கனவே இன்டர்நெட் மையம் வைத்து நடத்தி வந்துள்ளார்.
அவர்தான் வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பினாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். அனேகமாக அவர்தான் மிரட்டல் கடிதங்களை அனுப்பியிருக்க வேண்டும் என போலீஸார் நம்புகின்றனர்.