தண்ணி தெளிக்கும் கருணாநிதி: நெடுமாறன் தாக்கு
சென்னை:இலங்கை ராணுவத்துக்கு இந்தியா ஆயுதங்கள் வழங்குவது குறித்த செய்திகள் உண்மையாக இருந்தால் அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது தமிழர்களின் கொதிப்புணர்வை அடக்குவதற்கு தண்ணீர் தெளித்தது போல இருக்கிறது என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை அரசுக்கு இந்திய அரசு பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கியிருக்கிறது என்ற செய்தி தமிழ் மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியிருக்கிறது.
பல நூறு கோடி ரூபாய் பெறுமான கண்ணிவெடிப் பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன என்ற செய்தி கடந்த 20ம் தேதியன்று வெளியானது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து சட்டமன்றதில் பாமக தலைவர் மணி இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினர். இ.கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சி.புண்ணியம் அவர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் என சட்டமன்றத்தில் வற்புறுத்தப்பட்டது.
ஆனால் முதல்வர் கருணாநிதி இச்செய்தி உண்மைதானா என்று அறிந்து கொண்டு அதன்பின் கண்டனம் தெரிவிக்கலாம் என்று தமிழர்களின் கொதிப்புணர்வை அடக்குவதற்காக தண்ணீர் தெளித்திருக்கிறார்.
இச்செய்தி வந்து 4 நாட்கள் ஆகியும் இதுவரை இதுகுறித்து எந்த தகவலையும் மத்திய அரசிடம் கருணாநிதி கேட்டுத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யதது வருந்தத்தக்கது.
இலங்கை அரசுக்கு போர்க்கருவிகள் வழங்குவதில்லை என பிரதமர் மன்மோகன் சிங் உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் அளித்த வாக்குறிதிகளை அப்பட்டமாக மீறும் வகையில் நடைபெற்றுள்ள இச்செயலுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டிய வேலையில் பிரச்சனையை ஆறப்போடுவது ஈழத் தமிழர்களின் அழிவுக்கு வழிவகுக்கும்.
உடனடியாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அமைச்சர்கள் மூலம் நமது கடும் கண்டனத்தை பிரதமருக்குத் தெரிவிக்க கருணாநிதி அவர்கள் முன்வர வேண்டுமென வற்புறுத்துகிறேன் என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications