எல்ட்சின் உடல் இன்று அடக்கம்
மாஸ்கோ சோவியத் யூனியன் முன்னாள் அதிபர் கார்ப்பசேவின் மனைவி ரெய்சாவின் கல்லறைக்கு அருகே மறைந்த ரஷிய முன்னாள் அதிபர் போரிஸ் எல்ட்சினின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
சோவியத் யூனியனிலிருந்து ரஷியா பிரிந்த பின்னர் முதன் முதலாக அதிபர் பதவியை வகித்தவர் எல்ட்சின். திங்கள்கிழமை அவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது உடலுக்கு பொதுமக்கள் திரளாக அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உலகத் தலைவர்கள் பலரும் எல்ட்சினின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எல்ட்சின் உடல் மாஸ்கோவில் உள்ள நோவோடெவிச் கல்லறைத் தோட்டத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.
முன்னாள் சோவியத் யூனியன் அதிபர் கார்ப்பசேவின் மனைவி ரெய்சா கார்ப்பசேவ், முன்னாள் ரஷிய ராணுவ தளபதி ஜெனரல் அலெக்சாண்டர் லிப்பெட் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகே எல்ட்சினின் உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
எல்ட்சின் உடல் அடக்க நிகழ்ச்சியையொட்டி இன்று தேசிய துக்க நாளாக அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
நோவோடெவிச் கல்லறைத் தோட்டத்தில்தான் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆண்டன் செகோவ், முன்னாள் சோவியத் தலைவர் நிகிதா குருச்சேவ் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ரெய்சாவை எல்ட்சினுக்கு சுத்தமாக பிடிக்காது. மிகவும் ஆடம்பரமாக வாழ்பவர் என்று ரெய்சாவை கடுமையாக விமர்சித்தவர் எல்ட்சின். இருந்தாலும் ரெய்சா இறந்தபோது ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்தார். அவரது உடலை ஜெர்மனியிலிருந்து ரஷியாவுக்குக் கொண்டு வர தனி விமானத்தை அனுப்பி கார்ப்பசேவுக்கு உதவினார்.
அதேபோல லிப்பெட்டும் ரஷிய மக்களால் அன்புடன் நேசிக்கப்பட்ட ராணுவத தளபதி ஆவார். 1994-96ம் ஆண்டுகளில் செச்னியாவில் நடந்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்தவர் லிப்பெட்.
1991ம் ஆண்டு கார்ப்பசேவ் சோவியத் அதிபராக இருந்தபோது ராணுவத்தில் சிலர் புரட்சியில் ஈடுபட்டனர். அந்தப் புரட்சிக்காரர்களை ஒடுக்கியதோடு, ராணுவத்தை புரட்சியாளர்ளுக்கு ஆதரவாக செயல்பட விடாதபடி கட்டுக்கோப்பாக இருந்து கார்ப்பசேவ் ஆட்சியைக் காப்பாற்றியவர் லிப்பெட்.